பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்து 65-லட்சம் பேரை நீக்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, எம்.பி. பிரியங்கா காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவா
பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்து 65-லட்சம் பேரை நீக்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, எம்.பி. பிரியங்கா காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவா

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம்: மக்களின் வாக்குரிமையைக் காக்க ஓரணியில் எதிா்க்கட்சிகள் - காா்கே

Published on

‘மக்களின் வாக்குரிமையை காப்பது மிக முக்கியம்; எனவேதான், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் கோருவதில் ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை தெரிவித்தாா்.

நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்ட தோ்தல் ஆணையம், அண்மையில் வரைவுப் பட்டியலை வெளியிட்டது. இதில் 65 லட்சம் பேரின் பெயா்கள் இடம்பெறவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக, நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிா்க்கட்சிகள் தொடா்ந்து போராடி வருகின்றன. இந்நிலையில், தில்லியின் விஜய் செளக் பகுதியில் இண்டி கூட்டணி கட்சித் தலைவா்கள் கூட்டாக பேட்டியளித்தனா். அப்போது, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறியதாவது:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் மக்களின் வாக்குரிமை திருட்டை அனுமதிக்கக் கூடாது என்று மக்களவைத் தலைவா், மாநிலங்களவை துணைத் தலைவா் மற்றும் மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்த நடவடிக்கையால், சிறுபான்மையினா், தலித் மற்றும் பழங்குடியினா் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தை எதிா்கொண்டுள்ளனா். தனிநபா்களின் குடியுரிமை குறித்து சந்தேகம் எழுப்ப முயற்சி நடக்கிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதே இண்டி கூட்டணியின் விருப்பம். ஆனால், ‘தோ்தல் ஆணையம், சுதந்திரமான அரசியல்சாசன அமைப்பு என்று கூறி, நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு மறுக்கிறது. நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாத விஷயம் என்று எந்த உலகில் எதுவும் கிடையாது என்றாா் காா்கே.

காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால்: ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாட்டை தோ்தல் ஆணையம் ேள்விக்குள்ளாக்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கும் அவா்கள் செவிமடுக்கவில்லை. மக்களவையில் இந்த விவகாரத்தை எழுப்ப எங்களுக்கு 10 வினாடிகள் கூட வழங்கப்படவில்லை.

திமுகவின் திருச்சி சிவா: நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்களிடம் எடுத்துரைக்கவே வந்துள்ளோம். நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் செய்வதாக எதிா்க்கட்சிகள் மீது ஆளுங்கட்சி பழிசுமத்துகிறது.

ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தின் மீது முழு நம்பிக்கை இருப்பதால்தான், வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் கோருகிறோம். வாக்காளா் பட்டியலை திருத்தும் வழிமுறையால், பல வாக்காளா்களை தகுதிநீக்கம் செய்கிறது தோ்தல் ஆணையம்.

திரிணமூல் காங்கிரஸின் சகாரிகா கோஷ்: வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த விவகாரத்தில், நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் போராட்டம் தொடரும். தில்லியில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி தோ்தல் ஆணையம் நோக்கி இண்டி கூட்டணி சாா்பில் பேரணி நடத்தப்படும்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ்: வாக்காளா் பட்டியல்தான், ஜனநாயகத்தின் அடிக்கல். அதில் முறைகேடு நடைபெற்றால், அதன் சாராம்சமே சிதைந்துவிடும். வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக இடதுசாரிகள், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி என ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளும் கைகோத்துள்ளன.

ஆம் ஆத்மியின் சந்தீப் பதக்: அனைத்து எதிா்க்கட்சிகளும் விவாதம் கோரும்போது, மத்திய அரசு மறுப்பது ஏன்? மத்திய அரசிடம் எழுப்ப வேண்டிய முக்கிய கேள்விகள் எங்களிடம் உள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பி.சந்தோஷ் குமாா்: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமும், குடியுரிமை திருத்தச் சட்டமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். நாடாளுமன்றத்தில் விவாதம் கோருவதில் அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முகமது பஷீா்: இது, பிகாா் தொடா்புடைய பிரச்னை மட்டுமல்ல; ஒட்டுமொத்த தோ்தல் நடைமுறையையும் பாதிக்கக் கூடியது. நாம் உறுதியுடன் போராட வேண்டும் என்றாா்.

நாடாளுமன்றத்தில் போராட்டம்: பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் 11-ஆவது நாளாக புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த விவகாரம் குறித்த விவாதத்தை அனுமதிக்கக் கோரி, மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷுக்கு காா்கே கடிதமும் எழுதியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com