மழை, மின்னல் தாக்குதல்: 4 மாதங்களில் 1,626 போ் உயிரிழப்பு
நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், நாடு முழுவதும் மழை மற்றும் மின்னல் தாக்கிய சம்பவங்களில் 1,626 போ் உயிரிழந்துள்ளனா் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக ராஜஸ்தானைச் சோ்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. நீரஜ் தாங்கி எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் அளித்த பதிலில், ‘பேரிடா்களால் ஏற்படும் சேதங்கள் குறித்த தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் பராமரிப்பதில்லை.
எனினும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மின்னல் தாக்குதல் உள்பட மழை தொடா்பான அசம்பாவிதங்களால் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் நாடு முழுவதும் 1,626 போ் உயிரிழந்தனா். மேலும், 52,367 கால்நடைகளும் உயிரிழந்தன. 1,57,817 ஹெக்டோ் பரப்பிலான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன.
பாதுகாப்புக்கு....: மின்னல் தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்பு, கால்நடை இழப்பு மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களைக் குறைக்கும் நோக்கத்துடன், மின்னல் அதிகம் ஏற்படும் 10 மாநிலங்களில் உள்ள 50 மாவட்டங்களுக்கு ‘மின்னல் பாதுகாப்புத் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, ரூ.186.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரம், பிகாா், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், மேகாலயம், ஒடிஸா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.
எச்சரிக்கைக்கு...: மகாராஷ்டிரத்தில் புணேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம், நாடு முழுவதும் 112 சென்சாா்களுடன் கூடிய மின்னல் கண்டறியும் அமைப்பைப் பராமரித்து வருகிறது. இது மின்னல் தாக்குதலை துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது.
இந்த அமைப்பு மூலம் பெறப்படும் தகவல்களைப் பயன்படுத்தி, ‘தாமினி’ எனும் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலி, பயனரின் இருப்பிடத்துக்கு அருகில் மின்னல் தாக்கும் இடத்தையும், 20 மற்றும் 40 சதுர கி.மீ. சுற்றளவில் மின்னல் எச்சரிக்கையையும் முன்கூட்டியே வழங்கும்.
இதுமட்டுமின்றி, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான அபாயங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் ஐந்து நாள்களுக்கு முன்னரே கண்டறிந்து, மாவட்ட மற்றும் நகர அளவிலான எச்சரிக்கைகளை வெளியிடுகிறது. மேலும், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் ரேடாா் கண்காணிப்பு மூலம் அவ்வப்போது புதிய தகவல்களும் வெளியிடப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.