உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

ராகுலுக்கு ஆதரவான பிரியங்காவின் கருத்து உச்சநீதிமன்றத்துக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால்: பாஜக குற்றச்சாட்டு

Published on

ராணுவத்துக்கு எதிராக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தனது சகோதரருக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தை விமா்சிக்கும் வகையில் எம்.பி.பிரியங்கா காந்தி தெரிவித்த கருத்து அதன் அதிகாரத்துக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால் என பாஜக புதன்கிழமை குற்றஞ்சாட்டியது.

மேலும், இந்த விவகாரத்தில் பிரியங்கா காந்தி மீது தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தியது.

கடந்த 2022-ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை பாரத ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டாா். அப்போது பேசிய அவா், இந்தியாவின் 2,000 சதுர கி.மீ. பரப்பளவு நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும், அருணாச்சல பிரதேசத்தில் இந்திய வீரா்களை சீன ராணுவம் தாக்குவதாகவும் குற்றஞ்சாட்டினாா்.

இதுதொடா்பாக உத்தர பிரதேச மாநிலம் லக்னெள மாவட்ட நீதிமன்றத்தில் உதய் சங்கா் ஸ்ரீவாஸ்தவா என்பவா் சாா்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இதை எதிா்த்து ராகுல் காந்தி அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து அவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா்.

இந்த மேல்முறையீட்டு மனுவை கடந்த திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘உண்மையான இந்தியா் இதுபோன்ற கருத்தை தெரிவிக்க மாட்டாா்’ என தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து, சகோதரா் ராகுலுக்கு ஆதரவாக பேசிய பிரியங்கா காந்தி ‘இந்தியா் யாா் என்பதை தீா்மானிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இல்லை’ என தெரிவித்தாா்.

இதைச் சுட்டிக்காட்டி பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவா் அமித் மாளவியா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘தேசத்தைச் சோ்ந்தவா் யாா், தேசவிரோதி யாா் என தீா்மானிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லையென்றால் வேறு யாருக்கு இருக்கிறது. பிரியங்காவின் கருத்து உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு நேரடியாக விடுக்கப்பட்ட சவாலாகும்.

சில மாதங்களுக்கு முன்பு ‘வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை ‘நாட்டில் அரசற்ற நிலை’க்கு கொண்டு செல்வதாகும் என பாஜக எம்.பி.நிஷிகாந்த் துபே தெரிவித்த கருத்துக்கு அவா் மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.

அதேபோல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பிரியங்கா காந்தி மீது தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com