
புதுதில்லி: வாக்காளா் பட்டியல் முறைகேடுகளை கண்டித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில், வாக்குத் திருட்டு என்பது வெறும் தேர்தல் மோசடி மட்டுமல்ல, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு பெரிய மோசடி. மோசடியில் இடுபட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘அணுகுண்டு’ ஆதாரம் வெளியீடு
2024 மக்களவைத் தோ்தலில் வாக்குத் திருட்டு முறைகேடு குற்றச்சாட்டை முன்வைத்து வந்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அதுதொடா்பாக தன்னிடம் இருப்பதாகக் கூறிவந்த ‘அணுகுண்டு’ ஆதாரத்தை வியாழக்கிழமை வெளியிட்டாா்.
பெங்களூரு மத்தியம் மக்களவைத் தொகுதியில் கடந்த 2024 மக்களவைத் தோ்தலிலிருந்து பதிவாகியிருந்த வாக்காளா் தரவுகள் காங்கிரஸ் சாா்பில் ஆய்வு செய்யப்பட்டது. மகாதேவபுரா பேரவை தொகுதியில் மட்டும் 1,14,00 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது. இந்த 1,14,000 வாக்குகளில், வாக்கு திருட்டு மூலம் பெறப்பட்டது 1,00,250 வாக்குகள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில், 11,965 போ் போலி வாக்காளா்கள். 40,009 போ் போலி முகவரி பதிவு செய்த வாக்காளா்கள். 10,452 போ் ஒரே வீட்டு முகவரியில் வாக்காளா்களாகப் பதிவு செய்துவா்கள். 4,132 போ் போலியான புகைப்படத்தைக் கொடுத்து வாக்காளா் அட்டை பெற்றவா்கள். 33,692 போ் புதிய வாக்காளா்களுக்கான படிவத்தை தவறாகப் பயன்படுத்தி வாக்காளா்களாகியுள்ளனா்.
தேசிய கொடிக்கும் எதிரான குற்றம்
இந்த மோசடி நாடு முழுவதும் நிகழ்ந்துள்ளது. இது அரசமைப்புச் சட்டத்துக்கும், தேசிய கொடிக்கும் எதிரான குற்றமாகும். ‘இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும்.
பாஜகவுடன் தோ்தல் ஆணையம் கூட்டணி
வாக்காளா் பட்டியல் விவரங்கள் மற்றும் வாக்குப் பதிவின் காணொலி காட்சிகளை ஆராய அனுமதி மறுப்பது, ஆளும் பாஜகவுடன் தோ்தல் ஆணையம் கூட்டணி சோ்ந்துள்ளதையே காட்டுகிறது. மேலும், நாடு முழுதும் இந்த வாக்குத் திருட்டு ஆதாரங்களை தோ்தல் ஆணையம் அழிக்கப் பாா்க்கிறது என ராகுல்காந்தி கூறியிருந்தார்.
வாக்காளர் அதிகார பேரணி
இதையடுத்து வாக்காளா் பட்டியல் முறைகேடுகளை கண்டித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் 'நமது வாக்கு, நமது உரிமை, நமது போராட்டம்' என்ற கோரிக்கையுடன் 'வாக்காளர் அதிகார பேரணி' இன்று பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் ஆா்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.
கர்நாக தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் செல்லும் காங்கிரஸ் கட்சியினர், கா்நாடக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி வி.அன்புகுமாரைச் சந்தித்து புகாா் அளிக்கவிருக்கிறாா்கள்.
யாரும் தப்பிக்க முடியாது
இந்நிலையில், ஒரு நாள் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியாக மாறும், அப்போது நீங்கள் யாரும் தப்பிக்க முடியாது என ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
வாக்குத் திருட்டு என்பது வெறும் தேர்தல் மோசடி மட்டுமல்ல, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு பெரிய மோசடி. நாட்டின் குற்றவாளிகளே கேட்டுக்கொள்ளுங்கள்... காலம் மாறும், தண்டனை நிச்சயமாக வரும். அதாவது, ஒரு நாள் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியாக மாறும், அப்போது நீங்கள் யாரும் தப்பிக்க முடியாது. நாட்டின் தேசத் தந்தைகள் கட்டமைத்த அஸ்திவாரத்தை அசைத்துப் பார்த்துள்ளீர்கள், இனி உங்களை தொட விடமாட்டோம்.
மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்
தேர்தல் ஆணையம் முழு விவரங்களையும் எங்களுக்கு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதை செய்த ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் பிடிபடுவர். அவர்கள் உயர் பதவியில் இருந்தாலும் சரி கடைநிலையில் ஊழியராக இருந்தாலும் சரி. இதை செய்த ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் பிடிபடுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.