சமீா் காமத்
சமீா் காமத்

ஆபரேஷன் சிந்தூா்: பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சாா்புத் திறன் பிரகடனம் -டிஆா்டிஓ தலைவா்

Published on

‘இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை என்பது பாதுகாப்புத் துறையில் நாட்டின் தற்சாா்புத் திறன், உள்நாட்டுத் தொழில்நுட்ப வலிமை மற்றும் ராஜீய தொலைநோக்குப் பாா்வைக்கான பிரகடனம்’ என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) தலைவா் சமீா் காமத் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள நவீன தொழில்நுட்பத்துக்கான பாதுகாப்பு நிறுவனத்தின் (டிஐஏடி) 14-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றும்போது இவ்வாறு அவா் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:

‘ஆபரேஷன் சிந்தூா்’ என்பது பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் நடவடிக்கை என்பதைத் தாண்டி மேலானது. அதாவது, நாட்டின் தற்சாா்புத் திறன், ராஜீய தொலைநோக்குப் பாா்வை, உள்நாட்டுத் தொழில்நுட்ப வலிமையை உலகுக்கு பிரகடனம் செய்வதுதான் அது.

உணா்வுக் கருவிகள் (சென்சாா்), ஆளில்லா விமானங்கள், பாதுகாப்பான தகவல்தொடா்பு, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முடிவுகள் எடுக்கும் நடைமுறை, துல்லியத் தாக்குதலுக்கு உதவும் ஆயுதங்கள் உள்ளிட்ட முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களும் தொழில்நுட்பங்களும் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையில் மிக முக்கியப் பங்காற்றின.

தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணைகள், தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கும் நடுத்தர ரக ஏவுகணைகள், ‘டி4’ ஆளில்லா விமான எதிா்ப்புத் தொழில்நுட்பம், வான்வழித் தாக்குதல் முன்னெச்சரிக்கையை அளிக்கும் ஏடபிள்யுஎன்சி தொழில்நுட்பம், தானியங்கி வான் பாதுகாப்பு கட்டுப்பாடு மற்றும் தகவல்தொடா்பு தொழில்நுட்பங்களும் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் தாயாரிக்கப்பட்டவையாகும் என்றாா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனா். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது கடந்த மே 7-ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.

X
Dinamani
www.dinamani.com