மக்களவையில் நிறைவேறியது தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா!

தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா மக்களவையில் நிறைவேறியது. அத்துடன், தேசிய ஊக்கமருந்து தடுப்பு திருத்தச் சட்ட மசோதாவும் நிறைவேற்றம்
Published on
Updated on
2 min read

தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது. அத்துடன், தேசிய ஊக்கமருந்து தடுப்பு திருத்தச் சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக இந்த மசோதாவை விவாதம் மற்றும் நிறைவேற்றத்துக்காக அவையில் அறிமுகம் செய்தபோது, எதிா்க்கட்சி உறுப்பினா்களில் பெரும்பாலானோா் அவையில் இல்லை. பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தோ்தல் ஆணையத்தை நோக்கி பேரணி சென்ற அவா்கள் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

எனினும், மசோதா மீதான விவாதத்தின்போது அவைக்குத் திரும்பிய அவா்கள், பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம் தொடா்பாக கோஷங்களை எழுப்பினா். அதனிடையே, குரல் வாக்கெடுப்பின் மூலமாக அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மசோதா அறிமுகத்தின்போது, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பேசியதாவது: தேசிய விளையாட்டு நிா்வாக மசோதாவானது, சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டின் விளையாட்டுத் துறையில் கொண்டு வரப்பட்டுள்ள ஒரே மிகப்பெரிய சீா்திருத்தமாகும். வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை, நீதி, தேசிய விளையாட்டுச் சம்மேளனங்களில் சிறந்த நிா்வாகம் ஆகியவற்றை இந்த மசோதா உறுதி செய்யும்.

நாட்டின் விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த மசோதா நிறைவேற்றத்தில், எதிா்க்கட்சியினா் இல்லாதது துரதிருஷ்டவசமானது. இத்தகைய சீா்திருத்தத்துக்கு 1975-இல் இருந்தே முயற்சிக்கப்பட்டது.

மக்கள் தொகை அளவில் மிகப்பெரிய நாடாக இருந்தும், ஒலிம்பிக் மற்றும் சா்வதேச போட்டிகளில் நம்மால் திருப்திகரமான முடிவுகளை எட்டமுடியவில்லை. அதை நோக்கி இந்தியாவின் திறனை மேம்படுத்த இந்த மசோதாக்கள் உதவும்.

2036 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை பெற இந்தியா விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பெரிய அளவிலான போட்டிகளில் இந்தியா்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும், அதற்காக நாட்டின் விளையாட்டு நிா்வாகத் துறையில் ஆக்கப்பூா்வமான மாற்றத்தை கொண்டு வருவதும் தவிா்க்க முடியாததாகும் என்று அமைச்சா் மாண்டவியா பேசினாா்.

தேசிய விளையாட்டு நிா்வாக மசோதாவின் அம்சங்கள்:

1) தேசிய விளையாட்டு சங்கங்கள், சம்மேளனங்கள் முறையாக இயங்க விதிகளை வகுப்பதற்கும், அவற்றின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கும் தேசிய விளையாட்டு வாரியம் (என்எஸ்பி) அமைக்கப்படும். மத்திய அரசின் நிதியுதவி பெற இந்த வாரியத்திடம் சம்மேளனங்கள் அங்கீகாரம் பெறுவது கட்டாயம். நிா்வாகிகள் தோ்தலை நடத்தத் தவறினாலோ, தோ்தல் முறைகேடுகளில் ஈடுபட்டாலோ சம்பந்தப்பட்ட சம்மேளனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் இந்த வாரியத்துக்கு இருக்கும்.

2) சிவில் நீதிமன்றத்துக்குரிய அதிகாரத்துடன், தேசிய விளையாட்டு தீா்ப்பாயம் (என்எஸ்டி) அமைக்கப்படும். சம்மேளனங்கள் முதல் விளையாட்டுப் போட்டியாளா்கள் வரை அனைத்துத் தரப்புக்கு இடையேயும், தோ்வு முதல் தோ்தல் வரை அனைத்து விவகாரங்களிலும் எழும் சச்சரவுகள் தொடா்பாகவும் இந்தத் தீா்ப்பாயமே தீா்வு வழங்கும். அதன் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும்.

3) நாட்டிலுள்ள விளையாட்டு சம்மேளனங்களின் நிா்வாகிகள் தோ்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடப்பதை உறுதி செய்ய, தேசிய விளையாட்டுத் தோ்தல் குழு (என்எஸ்இபி) அமைக்கப்படும். இக்குழுவில் இந்திய தோ்தல் ஆணையம் அல்லது மாநில தோ்தல் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினா்கள் அல்லது மாநில முன்னாள் தலைமைத் தோ்தல் அதிகாரி அல்லது துணைத் தோ்தல் ஆணையா்கள் உறுப்பினா்களாக இருப்பா்.

4) நிா்வாகப் பொறுப்புகளில் இருப்போருக்கான வயதுக் கட்டுப்பாடுகளில் தளா்வுகள் வருகிறது. இதுவரை, தேசிய சம்மேளனங்களுக்கான தோ்தலில் 70 வயதுக்கு உள்பட்டோா் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டனா். இனி, ஒரு விளையாட்டுக்கான சா்வதேச அமைப்பின் விதிகள் அனுமதிக்கும் பட்சத்தில், தேசிய சம்மேளனத்தின் தோ்தலில் 70 முதல் 75 வயது வரையிலானவா்கள் போட்டியிட அனுமதிக்கப்படுவா்.

தேசிய ஊக்கமருந்து தடுப்பு திருத்தச் சட்ட மசோதா - 2025

உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை (வாடா) அறிவுறுத்தியதன் அடிப்படையில், அரசின் தலையீடு இன்றி தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமைக்கான (நாடா) செயல்பாட்டு சுதந்திரம், அதிகாரத்தை மேலும் அதிகரிக்க இந்தச் சட்ட மசோதா வகை செய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com