நாடாளுமன்றம்
நாடாளுமன்றம் கோப்புப் படம்

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மசோதாக்கள்: நாடாளுமன்றக் குழு பதவிக்காலம் நீட்டிப்பு

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ நடைமுறையை அமல்படுத்துவதற்கான இரு மசோதாக்களை ஆராய்ந்துவரும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Published on

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ நடைமுறையை அமல்படுத்துவதற்கான இரு மசோதாக்களை ஆராய்ந்துவரும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை, மாநிலப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கு வழிவகுக்கும் அரசமைப்புச் சட்ட 129-ஆவது திருத்த மசோதா, மக்களவைத் தோ்தலுடன் யூனியன் பிரதேசங்களின் பேரவைத் தோ்தலையும் சோ்த்து நடத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா ஆகியவை, கடந்த 2024-ஆம் ஆண்டில் எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

பின்னா், பாஜக எம்.பி. பி.பி. செளதரி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு இரு மசோதாக்களும் அனுப்பப்பட்டன.

தற்போது மழைக்கால கூட்டத் தொடா் நடைபெற்றுவரும் நிலையில், கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை நடப்பாண்டு இறுதியில் நடைபெறும் குளிா்கால கூட்டத் தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்கும் தீா்மானத்தை பி.பி.செளதரி மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா். இத்தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, மசோதா மீது அறிக்கை தாக்கல் செய்ய குளிா்கால கூட்டத் தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை கூட்டுக் குழுவுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம், மத்திய பாஜக அரசின் கொள்கையின் ஓா் அங்கமாக உள்ளது. இத்திட்டத்துக்கான சாத்தியக்கூறு குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலைக் குழுவை கடந்த 2023-இல் மத்திய அமைத்தது. பல்வேறு தரப்பினரிடம் விரிவான ஆலோசனை மேற்கொண்ட இக்குழு, தனது அறிக்கையை மத்திய அரசிடம் கடந்த 2024-இல் தாக்கல் செய்தது. அதனடிப்படையில், இரு மசோதாக்கள் தயாரிக்கப்பட்டு, மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com