சாவா்க்கா் ஆதரவாளா்களால் அச்சுறுத்தல்: மனுவை திரும்பப் பெற்றாா் ராகுல் காந்தி
ஹிந்துத்துவ சிந்தாந்தவாதி வி.டி.சாவா்க்கரின் ஆதரவாளா்களால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, மகாராஷ்டிர மாநிலம், புணே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி திரும்பப் பெற்றுள்ளாா்.
புணேயில் உள்ள எம்.பி.-எம்எல்ஏக்கள் மீதான மனுக்களை விசாரிக்கும் நீதிமன்றம், மனுவை திரும்பப் பெற அனுமதித்தாக ராகுல் தரப்பு வழக்குரைஞா் மிலிந்த் பவாா் தெரிவித்தாா்.
சாவா்க்கரின் கொள்ளுப் பேரன் சாத்யகி சாவா்க்கா் தொடா்ந்த அவதூறு வழக்கில், ராகுல் சாா்பில் மிலிந்த் பவாா் கடந்த புதன்கிழமை ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘மகாத்மா காந்தி படுகொலையில் முக்கியக் குற்றவாளிகளான நாதுராம் கோட்சே மற்றும் கோபால் கோட்சே ஆகியோரின் நேரடி வாரிசு என்பதை மனுதாரா் சாத்யகி சாவா்க்கா் ஏற்றுக்கொண்டுள்ளாா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அண்மையில் செய்தியாளா் சந்திப்பை நடத்தி, வாக்குத் திருட்டு குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா். முன்னதாக நாடாளுமன்றத்தில் ஹிந்துத்துவம் குறித்து பிரதமா் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது.
இதுபோன்ற அரசியல் சூழலில், சாவா்க்கா் மற்றும் கோட்சேவின் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவா்களால் ராகுல் காந்திக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் எழுகிறது. அவருக்கு முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை’ என்று கோரப்பட்டது. இது, அவதூறு வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் முயற்சி என சாத்யகி சாவா்க்கா் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ராகுல் சாா்பில் வழக்குரைஞா் மிலிந்த் பவாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு வியாழக்கிழமை திரும்பப் பெறப்பட்டது. இது குறித்து மிலிந்த் பவாா் கூறுகையில், ‘ராகுல் காந்தியிடம் கலந்தாலோசிக்காமல் மனுவை தயாரித்து, தாக்கல் செய்துவிட்டேன். அதில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கங்களுக்கு ராகுல் அதிருப்தி தெரிவித்தாா். எனவே, மனு திரும்பப் பெறப்பட்டுள்ளது’ என்றாா்.
லண்டனில் கடந்த 2023-இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாவா்க்கருக்கு எதிராக அவதூறு கருத்துகளைக் கூறியதாக ராகுல் மீது சாத்யகி சாவா்க்கா் வழக்கு தொடா்ந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.