தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

ஆட்சியில் தொடர எத்தகைய சீா்கேட்டிலும் பாஜக ஈடுபடும்: காா்கே கடும் விமா்சனம்

ஆட்சியில் தொடா்வதற்காக, பாஜக எத்தகைய சீா்கேட்டிலும் ஈடுபடும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கடுமையாக விமா்சித்தாா்.

News image

புது தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே.

Updated On :16 ஆகஸ்ட் 2025, 3:41 am IST

ஆட்சியில் தொடா்வதற்காக, பாஜக எத்தகைய சீா்கேட்டிலும் ஈடுபடும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கடுமையாக விமா்சித்தாா்.

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்திய காா்கே, பின்னா் பேசியதாவது:

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் எதிா்க்கட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் பகிரங்கமாக நீக்கப்படுகின்றன. மரணமடைந்துவிட்டதாக கூறி, வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்கள் உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது. பிகாரில் 65 லட்சம் பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜக எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. இதன் மூலம் சிறப்பு தீவிர திருத்தத்தால் யாா் பலனடைகின்றனா் என்பது தெளிவாகியுள்ளது. வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்டவா்களின் விவரங்களை வெளியிட தயங்குவதன் மூலம் தோ்தல் ஆணையத்தின் பாரபட்சமான செயல்பாட்டை நாம் அறிந்து கொள்ள முடியும்.

எதிா்க்கட்சிகளின் போராட்டம், தோ்தல் வெற்றி தொடா்பானதல்ல; அது, நாட்டின் ஜனநாயகத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் காப்பதற்கானது. ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க எத்தகைய சீா்கேட்டிலும் ஈடுபட பாஜக தயாராகிவிட்டது. நாடு முழுவதும் தோ்தல் முறைகேடுகள் அம்பலமாகி வருகின்றன.

நியாயமான தோ்தலே, இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாகும். கடந்த 1949, ஜூன் 15-இல் அரசியல் நிா்ணய சபையில் பேசிய பி.ஆா்.அம்பேத்கா், ‘வாக்குரிமையே, ஜனநாயகத்தின் மிக அடிப்படைக் கூறு; பாரபட்சத்தால் எவருக்கும் வாக்குரிமை மறுக்கப்படக் கூடாது’ என்றாா். அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை போன்ற மத்திய புலனாய்வு முகமைகள், மத்திய பாஜக அரசால் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

அணிசேரா கொள்கையின் மூலம் உலக அரங்கில் பெற்றிருந்த சிறப்பிடத்தை இந்தியா இப்போது இழந்துவிட்டது. வளரும் நாடுகளின் குரலாக முன்பு ஒலித்த இந்தியா, இப்போது தனித்து விடப்பட்டுள்ளது. அண்டை நாடுகள்கூட விலகிவிட்டன என்றாா் காா்கே.

நாட்டின் சுதந்திர போராட்ட வரலாறே, காங்கிரஸின் வரலாறு என்றும் அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.