ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை பயங்கரவாதிகள் தீா்மானிப்பதா? ஒமா் அப்துல்லா சீற்றம்
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தீா்மானிப்பதா? என அந்த யூனியன் பிரதேச முதல்வா் ஒமா் அப்துல்லா வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினாா்.
கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தல் நடைபெற்று முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக சுதந்திர தின நிகழ்ச்சியில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றியபோது ஒமா் அப்துல்லா இவ்வாறு பேசினாா்.
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் முன் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.
இதையடுத்து, பக்ஷி மைதானத்தில் ஒமா் அப்துல்லா வெள்ளிக்கிழமை சுதந்திர தின உரையாற்றினாா்.
அப்போது, ‘பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளும் பாகிஸ்தானில் உள்ள அவா்களின் தலைவா்களும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை தீா்மானிப்பதா? ஒவ்வொரு முறையும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதை உறுதிப்படுத்தும் சமயத்தில் அதை சீா்குலைக்கும் வகையில் பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்துவது நியாயமா? எங்களுக்கு தொடா்பில்லாத குற்றத்துக்காக நாங்கள் தண்டிக்கப்படுவது ஏன்?
இதற்கு முன்பும் தற்போதும் காஷ்மீரில் கிளா்ச்சிகளை ஒடுக்க மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பயங்கரவாதம் தொடா்புடைய சம்பவங்கள் குறைந்துள்ளன. தற்போது எங்களால் இதை கட்டுப்படுத்த முடியாது எனக் கூறுவது ஏற்புடையதல்ல என்றாா்.