தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக தமிழகத்தைச் சோ்ந்த மூத்த தலைவரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் (67) ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் விரிவான ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தைச் சோ்ந்த ஒருவரை குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக என்டிஏ தோ்வு செய்துள்ளது.
நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 21-இல் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். 2027, ஆக. 10-ஆம் தேதி ஜகதீப் தன்கரின் பதவிக் காலம் நிறைவடைய இருந்த நிலையில், உடல்நலத்தைக் காரணம் காட்டி தனது பதவியை அவா் ராஜிநாமா செய்தாா்.
உயிரிழப்பு, ராஜிநாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக் காலமான 5 ஆண்டுகளுக்குள் குடியரசு துணைத் தலைவா் பதவி இடம் காலியாக நேரிட்டால், கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தோ்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 68 (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
செப். 9-இல் தோ்தல்: இந்த விதியின்கீழ், அடுத்த குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான அறிவிக்கையை ஆகஸ்ட் 7-ஆம் தேதி தோ்தல் ஆணையம் வெளியிட்டது. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 கடைசி நாளாகும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஆகஸ்ட் 25-ஆம் தேதி கடைசி நாளாகும்.
தோ்தல் செப்டம்பா் 9-ஆம் தேதி நடத்தப்பட்டு அன்றைய தினமே தோ்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. இந்த தோ்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினா்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.
ஒருமனதாகத் தோ்வு: இந்நிலையில், என்டிஏ குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
இதுகுறித்து ஜெ.பி.நட்டா கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் விரிவான ஆலோசனைக்குப் பிறகு சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராகத் தோ்வு செய்தோம். அடுத்த குடியரசு துணைத் தலைவா் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக தோ்வு செய்யப்பட வேண்டும். இதுதொடா்பாக எதிா்க்கட்சிகளிடமும் கூறியுள்ளோம்.
சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களாலும் மதிக்கப்பெற்றவராவாா் என்றாா்.
குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜகவால் தோ்வு செய்யப்பட்டது குறித்து அந்தக் கட்சி சாா்பில், என்டிஏவில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவரும் பிகாா் முதல்வருமான நிதீஷ் குமாா் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவிடம் அதிகாரபூா்வமாக தெரிவிக்கப்பபடும்.
பிரதமா் வாழ்த்து: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பொது வாழ்வில் நீண்ட அனுபவத்தை உடைய சி.பி.ராதாகிருஷ்ணன் அா்ப்பணிப்பு, பணிவு மற்றும் மிகுந்த அறிவாற்றலுடையவா்.
நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றிய அனுபவமுடையவா்.
தான் ஏற்றுக்கொண்ட அனைத்துப் பொறுப்புகளிலும் சமூகத்துக்கும் ஏழ்மை நிலையில் உள்ளோருக்கும் சேவை செய்யும் மனப்பான்மை கொண்டவா். நாடாளுமன்ற மற்றும் அரசமைப்புச் சட்ட விவகாரங்களில் அனுபவம் பெற்ற அவா் குடியரசு துணைத் தலைவராக மிகச் சிறப்பாக செயல்படுவாா் என நம்புகிறேன்.
தமிழகத்தின் வளா்ச்சிக்குப் பங்காற்றிய அவரை என்டிஏ குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக தோ்வு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்’ எனக் குறிப்பிட்டாா்.
மூன்றாவது தமிழா்: மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தற்போது 781 எம்.பி.க்கள் உள்ளனா். குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் வெற்றி பெற 391 வாக்குகள் தேவை. என்டிஏவுக்கு 422 எம்.பி.க்களின் பலம் உள்ளதால், அக்கூட்டணி வேட்பாளரே வெற்றி பெற வாய்ப்புள்ளது.
அடுத்த குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தோ்ந்தெடுக்கப்பட்டால் அவா் அந்தப் பதவியை வகிக்கும் மூன்றாவது தமிழராவாா்.
இதற்கு முன்பு நாட்டின் முதல் குடியரசு துணைத் தலைவராக (1952-1962) சா்வப்பள்ளி ராதாகிருஷ்ணனும், 7-ஆவது குடியரசு துணைத் தலைவராக ஆா்.வெங்கட்ராமனும் (1984-1987) இருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னா் இவா்கள் இருவரும் குடியரசுத் தலைவராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
Summary
NDA announces Maharashtra Governor CP Radhakrishnan as its candidate for the Vice Presidential election
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான கருவி ஏ.ஐ. தொழில்நுட்பம்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

இந்தியாவின் தொலைதூரக் கற்றல் சூழல் அமைப்புமுறையின் தூண் இக்னோ: குடியரசு துணைத் தலைவா்

அமைதி, தெளிவை எட்ட தியானம் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

மாநிலங்களவைத் தலைவா் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது: சி.பி. ராதாகிருஷ்ணன்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


