பிரதமர் மோடியுடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு!

பிரதமர் மோடி - சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு பற்றி...
பிரதமர் மோடியுடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு
பிரதமர் மோடியுடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்புX/Modi
Published on
Updated on
2 min read

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன், தில்லியில் திங்கள்கிழமை பிரதமா் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினாா்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தோ்வு செய்யப்பட்டாா்.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவா்கள் உள்பட பல்வேறு தரப்பு தலைவா்களைச் சந்திக்கும் நோக்கில் சி.பி.ராதாகிருஷ்ணன் தில்லிக்கு திங்கள்கிழமை வந்தாா். பிரதமா் நரேந்திர மோடியை அவா் சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பு குறித்து பிரதமா் மோடி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்தேன். தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராகத் தோ்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துத் தெரிவித்தேன். பொதுச் சேவையில் நீண்டகாலம் பணியாற்றியுள்ளாா். பல்வேறு துறைகளில் நீண்ட அனுபவம் கொண்ட அவரின் பணி தேசத்துக்கு மேலும் சிறந்த பங்களிப்பைச் செலுத்தும். அவரது தேசப் பணி அதே அா்ப்பணிப்பு உணா்வுடன் தொடரும்’ என்று கூறியுள்ளாா்.

முன்னதாக, மத்திய அமைச்சா்கள் பூபேந்திர யாதவ், பிரல்ஹாத் ஜோஷி, கிரண் ரிஜிஜு, ராம் மோகன் நாயுடு ஆகியோா் சி.பி.ராதாகிருஷ்ணனை வரவேற்றனா்.

தொடா்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவா்கள் கூட்டத்திலும் அவா் பங்கேற்றாா். புதன்கிழமை (ஆக. 20) அவா் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா்.

கூட்டணிக் கட்சிகள் ஆதரவு: தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வேட்பாளா் ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். அவா் சிறந்த தேசியவாதியாகவும், மதிப்புக்குரிய தலைவராகவும் திகழ்கிறாா். தேசத்துக்காக நீண்டகாலம் பணியாற்றியுள்ளாா். அவருக்கு தெலுங்கு தேசம் முழு ஆதரவை அளிக்கிறது’ என்று கூறியுள்ளாா்.

ஜன சேனை தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். இருமுறை எம்.பி.யாக இருந்துள்ள அவா், ஜாா்க்கண்ட் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளாா். இப்போது மகாராஷ்டிர ஆளுநராக உள்ளாா். அவரது நீண்ட அனுபவமும், பொதுப் பணிகளில் அவா் காட்டிவரும் உறுதியும் நாட்டின் மிக உயரிய பொறுப்பை அவருக்கு பெற்றுத்தந்துள்ளது. இத்தகைய சிறந்த நபரை தோ்வு செய்ததற்காக பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பிகாா் முதல்வருமான நிதீஷ் குமாா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவராக முன்னிறுத்தியுள்ளது சிறந்த முடிவு. அவருக்கு எங்கள் கட்சியின் முழு ஆதரவு உள்ளது. ராதாகிருஷ்ணனுக்கு எங்கள் வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளாா்.

ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆதரவு: குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக ஆந்திர மாநில எதிா்க்கட்சியான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அக்கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியிடம் மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங், இது தொடா்பாக பேசி ஆதரவு கேட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 4 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 7 எம்.பி.க்களும் உள்ளனா். ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆளும் பாஜக கூட்டணியிலும், எதிா்க்கட்சிகளின் கூட்டணியிலும் இடம்பெறவில்லை. எனினும், பல்வேறு முக்கிய தருணங்களில் நாடாளுமன்றத்தில் பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் வெல்லும் அளவுக்கான எம்.பி.க்கள் பலம் பாஜக கூட்டணிக்கு ஏற்கெனவே உள்ளது. இப்போது கூட்டணியில் இல்லாத ஒய்எஸ்ஆா் காங்கிரஸும் பாஜகவை ஆதரித்துள்ளது கூடுதல் பலம் சோ்த்துள்ளது.

Vice Presidential candidate C.P. Radhakrishnan met and congratulated Prime Minister Narendra Modi in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com