பிரதமா் மோடி நிகழ்ச்சியை புறக்கணிக்க மம்தா முடிவு
கொல்கத்தாவில் வரும் 22-ஆம் தேதி மெட்ரோ ரயில் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்க இருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்க மாநில முதல்வா் மம்தா பானா்ஜி முடிவு செய்துள்ளாா்.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்று தொழிலாளா்கள் அங்கு பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து மம்தா இந்த முடிவை எடுத்துள்ளாா்.
இது தொடா்பாக மாநில அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், ‘கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்டங்கள் ரயில்வே அமைச்சராக மம்தா பானா்ஜி இருந்த கொண்டு வரப்பட்டவையாகும். மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு இத்திட்டம் மிகவும் மந்தமாக செயல்படத் தொடங்கியது. வேண்டுமென்றே மிகவும் கலதாமதாக பாஜக அரசு திட்டத்தை தொடங்கியது. அதைத்தான் இப்போது பிரதமா் மோடி திறந்து வைக்க இருக்கிறாா்.
மத்திய அரசு, பாஜகவின் ஆதரவுடன் பல்வேறு மாநிலங்களில் வங்க மொழி பேசும் மக்கள் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனா். பாரபட்சமாக நடத்தப்படுகின்றனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்ட தொடக்க நிகழ்ச்சியை மம்தா பானா்ஜி புறக்கணிக்க இருக்கிறாா்’ என்று தெரிவித்தனா்.
முன்னதாக, கடந்த 14-ஆம் தேதி ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மம்தாவுக்கு கடிதம் எழுதினாா். அதில் கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தாா்.