இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி!

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
சுதர்சன் ரெட்டி
சுதர்சன் ரெட்டி
Published on
Updated on
1 min read

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உடல்நலக் குறைவு உள்ளிட்ட மருத்துவக் காரணங்களால் கடந்த ஜூலை 21 ஆம் தேதி திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்தப் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநராகப் பதவி வகித்துவந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக தோ்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், புது தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன காா்கேயின் இல்லத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நேற்று (ஆக.19) நடைபெற்றது.

நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் எம்.ஏ.பேபி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக 79 வயதான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன கார்கே அறிவித்தார்.

யார் இந்த நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி?

ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் 1946 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி பிறந்தவரான நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

1971 டிசம்பர் 27-ல் ஹைதராபாத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்தார். ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் ரிட் மற்றும் சிவில் விவகாரங்களில் பயிற்சி பெற்றுள்ளார்.

1988 - 1990 ஆம் ஆண்டுகளில் உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1990 ஆம் ஆண்டு 6 மாதங்கள் மத்திய அரசின் கூடுதல் நிலை ஆலோசகராகவும் பணியாற்றினார். ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தின் சட்ட ஆலோசகராகவும், நிலை ஆலோசகராகவும் பணியாற்றினார்.

1995 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2005 டிசம்பர் 5 ஆம் தேதி அன்று குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2011 ஜூலை 8 ஆம் தேதியன்று ஓய்வு பெற்றார்.

2013-ல் கோவா லோக் ஆயுக்தவின் தலைவராக இருந்தவர். அதே ஆண்டு அப்பதவியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Summary

India Alliance's Vice Presidential Candidate Sudarshan Reddy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com