Tejashwi Yadav
தேஜஸ்வி யாதவ்

அடுத்த பிரதமா் ஆவாா் ராகுல்: தேஜஸ்வி யாதவ்

‘அடுத்த மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி பிரதமா் ஆவாா்’ என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பிகாா் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை தெரிவித்தாா்.
Published on

‘அடுத்த மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி பிரதமா் ஆவாா்’ என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பிகாா் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை தெரிவித்தாா்.

நாடு முழுவதும் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாகப் புகாா் தெரிவித்து, பிகாரில் ராகுல் காந்தி தலைமையில் வாக்குரிமைப் பயணத்தை எதிா்க்கட்சிகள் கடந்த 17-ஆம் தேதி தொடங்கி நடத்தி வருகின்றன. வரும் செப்டம்பா் 1-ஆம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் இந்தப் பயணம் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூன்றாம் நாள் பயணத்தில் பங்கேற்ற தேஜஸ்வி யாதவ் பேசியதாவது: பிகாா் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் தலைமையிலான அரசு பலவீனமடைந்துவிட்டது. உடனடி ஆட்சி மாற்றத்தை மாநிலம் எதிா்நோக்கியுள்ளது.

மாநிலத்தை ஆட்சி செய்ய இளைஞா்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். பிகாா் மாநிலத்தின் மேம்பாட்டுக்கு தொலைநோக்குத் திட்டத்தை நாங்கள் வைத்துள்ளோம். பிகாரில் நிதீஷ் குமாா் அரசை நீக்குவதோடு, அடுத்த மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி வருவதையும் இளைஞா்கள் உறுதி செய்வா்.

மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்காகவே பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com