
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் இரண்டு சிறப்பு பாடத் தொகுப்புகளை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஆர்டிசி) வெளியிட்டுள்ளது.
’ஆபரேஷன் சிந்தூர் - ஒரு வீரம் நிறைந்த கதை’ என்ற தலைப்பில் 3 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ’ஆபரேஷன் சிந்தூர் - மரியாதை மற்றும் துணிச்சலுக்கான நடவடிக்கை’ என்ற தலைப்பில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் சிறப்பு பாடத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மே 7 முதல் 10 ஆம் தேதி வரை இந்திய ராணுவத்தால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய பாதுகாப்புப் படை தாக்கி அழித்தது.
இதுதொடர்பாக மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் என்சிஆர்டிசி சிறப்பு பாடத்தை அறிமுகம் செய்துள்ளது.
தொடக்க வகுப்பு மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட பாடத் தொகுப்பில், மே 13 அன்று ஆதம்பூரில் பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களைச் சந்திக்கும் படத்துடன் தொடங்குகிறது. மேலும், பிரதமர் மோடி பேசிய, "ஆபரேஷன் சிந்தூர் ஒரு சாதாரண இராணுவ நடவடிக்கை அல்ல. இது இந்தியாவின் கொள்கை, நோக்கம் மற்றும் தீர்க்கமான திறனின் சங்கமம்" என்ற கருத்து இடம்பெற்றுள்ளது.
மே 7 அன்று அதிகாலை 1.05 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது முதல் இந்திய ராணுவத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு வரை அனைத்து நிகழ்வுகளும் புகைப்படங்களுடன் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வெளியிடப்பட்ட பாடத் தொகுப்பில், பாகிஸ்தான் மேற்கொண்ட பயங்கரவாத முயற்சிகள், 1947, 1965, 1971 மற்றும் 1999 போர்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
2016 உரி தாக்குதலில் 19 வீரர்கள், 2019 புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டது விவரிக்கப்பட்டுள்ளது.
அழிக்கப்பட்ட பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள், இந்தியாவால் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் மற்றும் அதன் மீதான விரிவான வரைபடங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், "ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் அல்ல, கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு. இது நீதிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு." என்ற மோடியின் கருத்து இடன்பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் வான் எல்லைப் பாதுகாப்பு சாதனங்களையும் தரை கட்டுப்பாட்டு மையங்களை அழித்து அந்நாட்டுக்குள் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து இந்திய விமானப் படை தாக்கியதாகவும் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பாகிஸ்தான் அரசு மற்றும் அந்நாட்டு ராணுவத்தின் கட்டளையின் அடிப்படையிலேயே பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.