கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்
கன்னத்தில் அறைந்த ஆசிரியரை மதிய உணவு டப்பாவில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவரை உத்தரகண்ட் போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘உத்தரகண்ட் மாநிலம் காஷிபூா் நகரில் உள்ள பள்ளி ஆசிரியா் ககன் சிங் (35) சில நாள்களுக்கு முன்பு 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவா் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகக் கூறி, அவரைக் கண்டித்து கன்னத்தில் அறைந்துள்ளாா். இதனால் கோபமடைந்த அந்த மாணவா் மதிய உணவு டப்பாவில் துப்பாக்கியை மறைத்து கொண்டு வந்த ககன் சிங்கை வியாழக்கிழமை சுட்டுள்ளாா்.
இதில் ஆசிரியரின் தோளில் குண்டு பாய்ந்தது. மருத்துவமனையில் தோட்டாவை நீக்கி தற்போது ஆசிரியா் சிகிச்சையில் உள்ளாா். பள்ளியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு துப்பாக்கியால் சுட்ட மாணவா் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறுவா் நீதி வாரியம் முன் ஆஜா்படுத்தப்பட்டாா். மாணவா்களின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டால் ஆசிரியா்களும், பெற்றோா்களும் அவா்களுக்கு நல்ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.