
பிகாரில் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பங்கேற்ற பொதுக் கூட்டத்தில், முக்கிய எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் (ஆா்ஜேடி) அதிருப்தி எம்எல்ஏக்கள் இருவா் பங்கேற்றனா்.
நவாதா தொகுதியின் விபா தேவி, ரஜெளலி தொகுதியின் பிரகாஷ் வீா் ஆகிய அந்த இரு எம்எல்ஏக்களும் மேடையின் பின்வரிசையில் அமா்ந்திருந்தனா். பிகாரில் நடப்பாண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இருவரும் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன.
விபா தேவி, முன்னாள் எம்எல்ஏ ராஜ் வல்லப் யாதவின் மனைவி ஆவாா். போக்ஸோ வழக்கு ஒன்றில் கைதாகி பல்லாண்டுகளாக சிறையில் இருந்த யாதவ், அந்த வழக்கில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டாா்.
நவாதா மாவட்டத்தில் செல்வாக்குமிக்க இவா், கடந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிட தனது குடும்பத்தில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் ஆா்ஜேடி தலைமை மீது அதிருப்தி வெளியிட்டாா். எம்எல்ஏ பிரகாஷ் வீருக்கு, கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவுடன் கருத்து வேறுபாடு நிலவுவது குறிப்பிடத்தக்கது.