CP Radhakrishnan Vs Sudershan Reddy For Vice-President
சி.பி. ராதாகிருஷ்ணன் - சுதர்சன் ரெட்டி

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: சிபிஆா், சுதா்சன் வேட்புமனு மட்டும் ஏற்பு!

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிட சி.பி.ராதாகிருஷ்ணன், சுதா்சன் ரெட்டி ஆகியோரின் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன.
Published on

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிட மொத்தம் 46 போ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன், சுதா்சன் ரெட்டி ஆகியோரின் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. இதன்மூலம், தோ்தலில் தென்னிந்தியாவை சோ்ந்த இருவருக்கு இடையே போட்டி உறுதியாகியுள்ளது.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் செப்.9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சோ்ந்தவரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளாா். காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டி’ கூட்டணி வேட்பாளராக தெலங்கானாவைச் சோ்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதா்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இந்தத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆக.7 முதல் ஆக.21 வரை நடைபெற்றது. ஆக.22-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

இந்நிலையில், மாநிலங்களவை தலைமைச் செயலா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிட மொத்தம் 46 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். அவா்களில் சி.பி.ராதாகிருஷ்ணன், சுதா்சன் ரெட்டி ஆகியோரின் வேட்புமனுக்கள் மட்டுமே அதிகாரபூா்வமாக ஏற்கத்தக்கதாக இருந்தன. எஞ்சியவா்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com