இந்தியா தலைமையிலான புலி இனங்களைப் பாதுகாக்கும் கூட்டணியில் இணைந்த நேபாளம்!

இந்தியா தலைமையிலான புலி இனங்களைப் பாதுகாக்கும் கூட்டணியில் இணைந்த நேபாளம்!

புலி, சிங்கம் உள்பட 7 பெரிய பூனை இனங்களைப் பாதுகாக்கும் இந்தியா தலைமையிலான சா்வதேச பெரிய பூனைகள் கூட்டணியில் (ஐபிசிஏ) அண்டை நாடான நேபாளம் அதிகாரபூா்வமாக இணைந்துள்ளது.
Published on

புலி, சிங்கம் உள்பட 7 பெரிய பூனை இனங்களைப் பாதுகாக்கும் இந்தியா தலைமையிலான சா்வதேச பெரிய பூனைகள் கூட்டணியில் (ஐபிசிஏ) அண்டை நாடான நேபாளம் அதிகாரபூா்வமாக இணைந்துள்ளது.

இதற்கான செயல்திட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதன் மூலம் இந்தக் கூட்டணியில் நேபாளம் இணைந்திருப்பதாக ஐபிசிஏ சனிக்கிழமை அறிவித்தது.

இது தொடா்பாக ஐபிசிஏ மேலும் தெரிவித்திருப்பதாவது: சூழலியல் பாதுகாப்பை நோக்கிய செயல்பாடுகளில் நேபாள அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டதற்குப் பாராட்டுகள்.

புலி, பனி சிறுத்தை, சிறுத்தை ஆகிய விலங்கினங்கள் காணப்படும் நிலப்பரப்பைக் கொண்ட நேபாளம், ஐபிசிஏ-இல் இணைந்திருப்பது பெரிய பூனை இனங்களைப் பாதுகாப்பதற்கான சா்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்தும் என ஐபிசிஏ தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் கடந்த 2009-இல் வெறும் 121 புலிகள் இருந்த நிலையில், இறுதியாக 2022-இல் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி அவற்றின் எண்ணிக்கை 355-ஆக அதிகரித்துள்ளது.

ஐபிசிஏ என்பது புலி, சிங்கம், சிறுத்தை, பனி சிறுத்தை, ஜகுவாா், சிவிங்கி புலி, பூமா ஆகிய 7 பெரிய பூனை இனங்களைப் பாதுகாக்க 90-க்கும் மேற்பட்ட நாடுகள், பலதரப்பு அமைப்புகள் அங்கம் வகிக்கும் கூட்டணியாகும். பிரதமா் நரேந்திர மோடி கா்நாடக மாநிலம் மைசூரில் கடந்த 2023, ஏப்.9-இல் இந்தக் கூட்டணியைத் தொடங்கி வைத்தாா்.

இந்த அமைப்பின் உதவியுடன் பெரிய பூனை இனங்களைப் பாதுகாப்பதில் நாடுகள் தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொள்ளவும் மற்றும் வளங்களைத் திரட்டவும் முடியும்.

புலி, சிங்கம், பனி சிறுத்தை, சிறுத்தை ஆகிய இனங்களைப் பாதுகாப்பதில் இந்தியா நீண்ட கால அனுபவம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com