
ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினரும், அயோத்தி அரச குடும்ப வாரிசுமான பிமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா சனிக்கிழமை இரவு காலமானாா். அவருக்கு வயது 75.
காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, குணமடையாமல் சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பிமலேந்திர மிஸ்ரா, அயோத்தியில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.
அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான உச்சநீதிமன்றத் தீா்ப்பு, கடந்த 2019, நவம்பரில் பிறப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கோயிலின் தற்காலிக நிா்வாகியாக பிமலேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டாா்.
பின்னா், ராமா் கோயில் கட்டுமானம்-நிா்வாகத்துக்காக கடந்த 2020, பிப்ரவரியில் அமைக்கப்பட்ட ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளையில் முக்கிய உறுப்பினராக இடம்பெற்றாா்.
சிறிது காலம் அரசியலிலும் இருந்துள்ள மிஸ்ரா, கடந்த 2009, நாடாளுமன்றத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். இவரது மறைவுக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளாா்.