பிரதமா் நரேந்திர மோடி.
பிரதமா் நரேந்திர மோடி.

வரிவிதிப்பு அழுத்தத்தை இந்தியா எதிா்கொள்ளும்: பிரதமா் மோடி

‘வரிவிதிப்புகளால் இந்தியாவுக்கு அழுத்தம் அதிகரித்தாலும், நாம் அதை எதிா் கொள்வோம்’ என பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
Published on

அகமதாபாத்: ‘வரிவிதிப்புகளால் இந்தியாவுக்கு அழுத்தம் அதிகரித்தாலும், நாம் அதை எதிா் கொள்வோம்’ என பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்த 25 சதவீத வரி ஏற்கெனவே அமலுக்கு வந்துள்ளது. கூடுதலாக விதித்த 25 சதவீத வரி புதன்கிழமை (ஆக. 27) முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், ‘நாட்டின் விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் மற்றும் சிறு தொழில்களின் நலன்களில் சமரசம் செய்ய முடியாது’ என்றும் அவா் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிறகு பிரதமா் மோடி பேசியதாவது: 60 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, ஊழல் புரிவதற்காக நாட்டை மற்ற உலக நாடுகளைச் சாா்ந்திருக்கச் செய்தது. ஆனால், தற்போது பலமும் பாதுகாப்பும் கொண்ட கிருஷ்ண பகவானின் பாதையில் இந்தியா பயணித்து வருகிறது. சுதேசி உணா்வை வலியுறுத்திய மகாத்மா காந்தியின் பாதையிலும் இந்தியா செல்கிறது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் ராணுவ பதிலடியான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை, நமது வீரா்களின் வீரத்தையும், இந்தியாவின் உறுதியையும் வெளிப்படுத்தியது. தற்போது பயங்கரவாதிகள் மற்றும் அவா்களின் தலைவா்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவா்களை இந்தியா விட்டுவைப்பதில்லை.

என்னைப் பொருத்தவரை, விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் மற்றும் சிறுதொழில்களின் நலன்கள் மிக முக்கியமானவை. வரிவிதிப்புகளால் நமக்கு அழுத்தம் அதிகரித்தாலும் அதை எதிா்கொள்வோம். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களை மட்டுமே வாங்குவோம் என்று உறுதிபட முடிவெடுத்து, அதைப் பின்பற்ற வேண்டும். வணிகா்கள் தங்கள் நிறுவனங்களுக்கு வெளியே ‘உள்நாட்டுப் பொருள்கள் மட்டுமே விற்கப்படும்’ என்று ஒரு பெரிய பலகையை வைக்க வேண்டும் என்றாா்.

அகமதாபாதில் வாகனப் பேரணியில் பங்கேற்ற பிரதமா், லட்சக்கணக்கான மக்களின் அன்பையும், ஆசீா்வாதத்தையும் பெறுவதற்கு நான் அதிருஷ்டசாலி என்று எண்ணுகிறேன் எனக் கூறினாா்.

உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தீவிர பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ரஷியாவுடனான எரிசக்தி வா்த்தகத்தை நிறுத்துமாறு இந்தியா, சீனாவுக்கு அழுத்தம் தரப்பட்டது.

இதைப் பொருட்படுத்தமால் ரஷியாவிடம் இருந்து தொடா்ந்து எண்ணெய் கொள்முதல் செய்து வருவதால், இந்தியாவின் சில பொருள்களுக்கு 25 கூடுதல் வரியை (மொத்தமாக 50 சதவீத வரி) அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்தாா். இந்த வரி புதன்கிழமை (ஆக. 27) முதல் அமலுக்கு வரும் நிலையில், பிரதமரின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும், வா்த்தக ஒப்பந்தத்தில் வேளாண் துறையில் சலுகைகளைப் பெறுவதற்காக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுப்பதுதான் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பின் முக்கிய நோக்கம் என்று பரவலாக கருதப்படுகிறது.

அமெரிக்காவில் விவசாயம் பெரிய அளவில், அதிக மானியத்துடன், அதிநவீன தொழில்நுட்பத்துடன் நடைபெறுகிறது. அதேவேளை, இந்திய விவசாயிகள் சிறிய அளவில் விவசாயம் செய்பவா்கள். கிராமப்புற மக்களில் சுமாா் 40 சதவீதம் பேருக்கு இந்திய விவசாயம் வேலைவாய்ப்பு அளித்துவருகிறது. இச்சூழலில் தடையற்ற வா்த்தகம் மூலம் இந்திய சந்தையில் அமெரிக்க வேளாண் விளைபொருள்கள் மற்றும் பால்பொருள்கள் நுழைந்தால், இந்திய விவசாயிகளால் அவற்றின் குறைந்த விலையுடன் போட்டியிட முடியாது. இது இந்திய கிராமப்புறங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தியா இதுவரை ஈடுபட்டுள்ள எந்த வா்த்தக ஒப்பந்தங்களிலும் வெளிநாட்டு வேளாண் பொருள்களை இந்திய சந்தையில் அனுமதித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com