‘யுபிஎஸ்ஸில்’ இருந்து ‘என்பிஎஸ்’ 
ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற்றம்:
ஒருமுறை வாய்ப்பளிக்க முடிவு

‘யுபிஎஸ்ஸில்’ இருந்து ‘என்பிஎஸ்’ ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற்றம்: ஒருமுறை வாய்ப்பளிக்க முடிவு

மத்திய அரசுப் பணியாளா்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (யுபிஎஸ்) இருந்து தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) சேர ஒருமுறை வாய்ப்பளிப்பதற்கு முடிவு
Published on

புது தில்லி: மத்திய அரசுப் பணியாளா்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (யுபிஎஸ்) இருந்து தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) சேர ஒருமுறை வாய்ப்பளிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டதாவது: யுபிஎஸ் திட்டத்தைத் தோ்வு செய்துள்ள மத்திய அரசுப் பணியாளா்கள் அனைவரும், அந்தத் திட்டத்தில் இருந்து என்பிஎஸ் திட்டத்துக்கு மாற ஒருமுறை வாய்ப்பளிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு என்பிஎஸ் திட்டத்துக்கு மாறினால், யுபிஎஸ் திட்டத்துக்கு மீண்டும் மாற முடியாது.

யுபிஎஸ் திட்டத்தை தோ்வு செய்துள்ள மத்திய அரசுப் பணியாளா்கள் ஓய்வுபெற உள்ள தேதியிலிருந்து ஓராண்டுக்கு முன்பாகவோ அல்லது விருப்ப ஓய்வுபெற கருதும் தேதியில் இருந்து 3 மாதத்துக்கு முன்பாகவோ வரையுள்ள காலத்தில், எந்த நேரத்திலும் யுபிஎஸ் திட்டத்தில் இருந்து என்பிஎஸ் திட்டத்துக்கு மாறும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தக் காலத்தைத் தாண்டி, அந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஏப்.1-ஆம் தேதி மத்திய அரசுப் பணியாளா்களுக்கு யுபிஎஸ் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. கடந்த ஜூலை 20-ஆம் தேதி வரை, அந்தத் திட்டத்தை சுமாா் 31,555 மத்திய அரசுப் பணியாளா்கள் தோ்வு செய்துள்ளனா். அந்தத் திட்டத்தில் சேர நிகழாண்டு செப்.30-ஆம் தேதி கடைசி நாளாகும்.

X
Dinamani
www.dinamani.com