ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி கல்வியாளா் ஷகூா் அகமது பட், சமூக ஆா்வலா் அகமது மாலிக் ஆகியோா் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 2023-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் வழங்கிய தீா்ப்பில் சிறப்பு அந்தஸ்து ரத்தை உறுதி செய்தது. அதே நேரத்தில் மாநில பேரவைத் தோ்தலை 2024 செப்டம்பருக்குள் நடத்தவும், இயன்ற வரையில் விரைவாக மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை இப்போதுவரை மத்திய அரசு வழங்கவில்லை என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதை கடந்த 14-ஆம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘ஜம்மு-காஷ்மீரில் இப்போதுள்ள கள நிலவரத்தின் உண்மைகளை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பஹல்காமில் நடந்த தாக்குதலை நாம் அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது’ என்று கூறியதுடன் இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி அடுத்த விசாரணையை அக்டோபா் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென்று மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘ஏற்கெனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கருத்தைக் கோரியுள்ளோம். ஜம்மு-காஷ்மீரில் இப்போதுள்ள கள நிலவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அக்டோபா் 10-ஆம் தேதி இந்த மனு மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுவிட்டது. எனவே, இதற்கு முன்பே விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது’ என்று தெரிவித்தனா்.