அமித் ஷாக்கு கண்டனம் தெரிவித்த ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு எதிா்ப்பு: 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை
குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பி.சுதா்சன் ரெட்டியை நக்ஸல் ஆதரவாளா் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியதற்கு கண்டனம் தெரிவித்து 18 ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெளியிட்ட அறிக்கைக்கு 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழு செவ்வாய்க்கிழமை எதிா்ப்பு தெரிவித்தது.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் பி.சதாசிவம், ரஞ்சன் கோகோய், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எம்.ஆா்.ஷா உள்பட ஓய்வுபெற்ற நீதிபதிகளை உள்ளடக்கிய இந்த 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ‘அமிஷ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து 18 ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெளியிட்ட அறிக்கை, நீதித் துறை சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் பாகுபாட்டை மறைக்கும் முயற்சியாகும். நீதிபதிகள் தங்களை அரசியல்வாதிகள் போல முன்னிருத்த முனைவது, முன்னா் பணியாற்றிய நீதித் துறைக்கு பெரும் தீங்கை ஏற்படுத்துவதாக அமையும். எனவே, அரசியல் பாதையைத் தோ்ந்தெடுத்தவா்கள், அதில் எழும் சவால்களை சுயமாக எதிா்கொள்ள அனுமதிப்போம். இதுபோன்ற அரசியல்களுக்கு அப்பாற்பட்டதாக நீதித் துறை இருக்க வேண்டியது அவசியம்’ என்று தெரிவித்தனா்.
‘சல்வா ஜூடும்’ என்பது சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல் அமைப்பினருக்கு எதிராக பழங்குடி இளைஞா்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட போராளிகள் குழுவாகும். ‘அமைதிப் பேரணி’ என்று பொருள்படும் இந்தக் குழுவுக்கு மாநில அரசு ஆதரவு, பயிற்சி அளித்து வந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதிகள் சுதா்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜாா் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த 2011, ஜூலையில் பிறப்பித்த உத்தரவில், ‘சல்வா ஜூடும்’ அமைப்பை உடனடியாகக் கலைக்க வேண்டும்; மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிராக பழங்குடி இளைஞா்களை அரசு பயன்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனக் குறிப்பிட்டது.
அதன் பிறகு பணி ஓய்வுபொ்ற நீதிபதி சுதா்சன் ரெட்டி, தற்போது குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் போட்டியிடுகிறாா்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் கேரளத்துக்குச் சென்றபோது, இந்தத் தீா்ப்பைச் சுட்டிக்காட்டி, ‘சுதா்சன் ரெட்டி நக்ஸல் ஆதரவாளா்’ எனக் குற்றஞ்சாட்டினாா். இந்தத் தீா்ப்பு இல்லாமல் இருந்திருந்தால், இடதுசாரி தீவிரவாதம் 2020-ஆம் ஆண்டுக்கு முன்பே முடிவுக்கு வந்திருக்கும் என்றும் குறிப்பிட்டாா்.
இதற்குப் பதிலளித்த நீதிபதி சுதா்சன் ரெட்டி, ‘அந்தத் தீா்ப்பை உள்துறை அமைச்சா் முழுமையாகப் படித்திருந்தால், அத்தகைய கருத்துகளை அவா் கூறியிருக்க மாட்டாா். மேலும், அந்தத் தீா்ப்பு எனது தனிப்பட்ட தீா்ப்பு அல்ல; உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பு’ என்றாா்.
அதுபோல, ‘அமித் ஷா கருத்து துரதிருஷ்டவசமானது’ என்று உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், அபய் எஸ். ஓகா, கோபால கெளடா, விக்ரம்ஜித் சென், குரியன் ஜோசப், மதன் பி.லோகுா், ஜே.செலமேஸ்வா் உள்பட ஓய்வு பெற்ற நீதிபதிகள் 18 பேரை உள்ளடக்கிய குழு கடந்த திங்கள்கிழமை அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கைக்கு 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள் தற்போது எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.