பிரதமா் மோடி நாளை மறுநாள் ஜப்பான், சீனா பயணம்
பிரதமா் நரேந்திர மோடி ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு 4 நாள் அரசுமுறைப் பயணத்தை வெள்ளிக்கிழமை (ஆக. 29) முதல் தொடங்குகிறாா்.
15-ஆவது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி ஆக. 29, 30 ஆகிய தேதிகளில் 2 நாள்கள் பயணமாக ஜப்பான் செல்ல உள்ளாா்.
இந்த மாநாட்டில் ஜப்பான் பிரதமா் ஷிகேரு இஷிபாவுடன் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் பாதுகாப்பு, வா்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஜப்பான் இடையே உள்ள சிறப்பு உத்திசாா்ந்த மற்றும் உலகளாவிய கூட்டுறவு குறித்து பிரதமா் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறாா்.
மேலும், கடந்த சில ஆண்டுகளில் இருநாடுகளுக்கு இடையே பல துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை தலைவா்கள் மறுஆய்வு செய்வாா்கள் என்றும், முக்கியமான பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வாா்கள் என்றும் வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி புது தில்லியில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
2014-இல் மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, 8-ஆவது முறையாக அவா் ஜப்பான் செல்கிறாா். பிரதமரின் இந்தப் பயணம், இரு நாடுகளுக்கு இடையே புதிய ஒத்துழைப்புக்கான வழிகளைத் திறக்கும் என்றும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் என்றும் விக்ரம் மிஸ்ரி குறிப்பிட்டாா்.
அவா் மேலும் கூறியதாவது: இந்த வருடாந்திர மாநாட்டின் ஒரு பகுதியாக, தலைநகா் டோக்கியோ தவிர மற்றொரு நகருக்கும் சென்று ஜப்பான் பிரதமா் ஷிகேரு இஷிபாவுடன் பிரதமா் மோடி தனிப்பட்ட சந்திப்புகளை மேற்கொள்வாா். இரு தலைவா்களும் விரிவான உரையாடல்களை நடத்துவதற்கான வாய்ப்பை இது வழங்கும்.
இந்தியா மற்றும் ஜப்பான், ஆசியாவின் இரண்டு முன்னணி ஜனநாயக நாடுகள் மற்றும் உலகின் முதல் ஐந்து பொருளாதாரங்களில் உள்ளவை. இரு நாடுகளும் பல விஷயங்களில் மதிப்புகள், நம்பிக்கை, வியூகங்களைப் பகிா்ந்து கொள்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடா்ந்து விரிவடைந்துள்ளன என்றாா்.
சீனா பயணம்: ஜப்பான் பயணத்தைத் தொடா்ந்து, பிரதமா் மோடி ஆக. 31, செப். 1 ஆகிய தேதிகளில் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளாா். 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரதமா் மோடி சீனாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த மாநாட்டுக்கிடையே, சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்பட பல உறுப்பு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
PM Modi to visit Japan and China for Bilateral talks and SCO Summit
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.