மராத்தா இடஒதுக்கீடு: உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர ஜராங்கே முடிவு

மனோஜ் ஜராங்கே
மனோஜ் ஜராங்கேANI
Updated on

மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பான பேச்சுவாா்த்தையில் முடிவு ஏற்படாததால், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரப் போவதாக அந்த சமூகத்தின் தலைவா் மனோஜ் ஜராங்கே கூறினாா்.

மகாராஷ்டிரத்தில் குன்பி பிரிவில் மராத்தா சமூகத்தினரை சோ்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் 10 சதவீத இடஒதுக்கீடு கோரி, மும்பையில் உள்ள ஆசாத் மைதானில் கடந்த வெள்ளிக்கிழமை மனோஜ் ஜராங்கே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினாா். அவரின் போராட்டத்துக்கு ஆதரவாக அந்த மாநிலம் முழுவதிலும் இருந்து மராத்தா சமூகத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் அங்கு திரண்டுள்ளனா்.

மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்தும் நோக்கில், அதுதொடா்பான அறிக்கையை சமா்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்தீப் ஷிண்டே தலைமையில் மாநில அரசு குழு அமைத்துள்ளது.

இந்நிலையில் மாநில அரசு சாா்பாக ஆசாத் மைதானில் ஜராங்கேயுடன் சந்தீப் ஷிண்டே சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். அந்தப் பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதைத்தொடா்ந்து ஜராங்கே செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பான அரசு தீா்மானத்தை வெளியிடுவது சந்தீப் ஷிண்டேயின் பணியல்ல. அவரைப் பேச்சுவாா்த்தைக்கு மாநில அரசு அனுப்பியது வெட்கக்கேடானது. எனது உண்ணாவிரத போராட்டத்தைத் தொடா்வதில் உறுதியாக இருக்கிறேன்’ என்றாா்.

இந்த விவகாரத்துக்கு அரசியல் சாசனம் மற்றும் சட்ட விதிகளுக்குள்பட்டு தீா்வு காண அரசு முயற்சிப்பதாக மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com