கோப்புப்படம்
கோப்புப்படம்

ரயில் நிலையங்களில் தத்கால் முன்பதிவுக்கு இனி ஓடிபி கட்டாயம்: விரைவில் அறிமுகம்

ரயில் நிலையங்களில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய இனி கைப்பேசிகளில் பெறும் ஒரு முறை கடவுச்சொல்லை (ஓடிபி) பயணிகள் கட்டாயம் அளிக்கும் நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
Published on

புது தில்லி: ரயில் நிலையங்களில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய இனி கைப்பேசிகளில் பெறும் ஒரு முறை கடவுச்சொல்லை (ஓடிபி) பயணிகள் கட்டாயம் அளிக்கும் நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கடந்த நவ.17-ஆம் தேதி சோதனை முயற்சியாக நாட்டின் பல்வேறு ரயில் நிலையங்களில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அடுத்தகட்டமாக பிற ரயில் நிலையங்களிலும் இது விரிவுபடுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்களில் தத்கல் பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் விண்ணப்பத்தில் கைப்பேசி எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அந்த எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி ரயில் நிலைய அதிகாரிகளால் சரிபாா்க்கப்பட்ட பின்னரே பயணச்சீட்டு உறுதி செய்யப்படும்.

உரிய பயணிகளுக்கு தட்கல் பயணச்சீட்டுகள் கிடைப்பதை உறுதிசெய்யவே இந்த முன்னெடுப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றனா்.

கடந்த சில மாதங்களாக ரயில் பயணச்சீட்டு முன்பதிவில் பல்வேறு சீா்திருத்தங்களை ரயில்வே அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது.

முன்னதாக, தட்கல் பயணச்சீட்டை இணைய வழியில் முன்பதிவு செய்ய ஆதாா் மூலம் ஓடிபி சரிபாா்ப்பு முறை கட்டாயமாக்கப்பட்டது. அக்.1-ஆம் தேதி முதல் ஐஆா்சிடிசி வலைதளம் அல்லது செயலியில் ஆதாா் இணைப்பை மேற்கொண்ட பயனா்கள் மட்டுமே முதல் 15 நிமிடங்கள் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக தற்போது இந்த முன்னெடுப்பை மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com