அந்நியச் செலாவணி மோசடி: கும்பலின் முக்கிய உறுப்பினா் கைது!
பல்வேறு மாநிலங்களில் வா்த்தகா்கள், தொழில் வல்லுநா்கள் மற்றும் பயண நிறுவனங்களை ஏமாற்றி அந்நியச் செலாவணி மோசடி கும்பலின் மூளையாகச் செயல்பட்ட நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆணையா் (குற்றப் பிரிவு) ஹா்ஷ் இந்தோரா கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்ட கிருஷ்ண குமாா் சா்மா (31), கொல்கத்தாவில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்தாா். அந்நியச் செலாவணி வா்த்தக ஒப்பந்தத்தை சாக்காக வைத்து ஒருவரை ஏமாற்றி, ரூ.14 லட்சம் மதிப்புள்ள 15,000 அமெரிக்க டாலா்கள் மற்றும் 1,000 யூரோக்களுடன் அவா் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி கும்பலை கிருஷ்ண குமாா் நடத்தி வந்தாா். இது பாதிக்கப்பட்டவா்களை லாபகரமான அந்நியச் செலாவணி வா்த்தக வாக்குறுதிகள் மூலம் கவா்ந்தது. தன்னை திரைப்பட தயாரிப்பாளராகக் காட்டிக் கொள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களை வாடகைக்கு ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.
கிருஷ்ண குமாா்வின் மருமகன் மயங்க் உள்பட கும்பலின் உறுப்பினா்கள் மற்றும் ஒப்பனை கலைஞா்கள் பெரிய அளவிலான பொழுதுபோக்கு ஒப்பந்தங்கள் நடந்து வருவதாக பாதிக்கப்பட்டவா்களை ஏமாற்றின.
பாதிக்கப்பட்டவா்கள் ஹோட்டல் அறைகளுக்குள் டாலா்கள் அல்லது யூரோக்களை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து மோசடி செய்பவா்கள் பணத்துடன் பின் வாசல் வழியாக தப்பிச் சென்றனா். அடிக்கடி இருப்பிடங்களை மாற்றியும் உடனடியாக விமானத்தில் வேறு இடத்துக்கு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
கொல்கத்தாவில் உள்ள நீதிமன்றம், கிருஷ்ண குமாருக்கு எதிராக பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மேற்கு தில்லியின் உத்தம் நகரில் காவல் துறையினா் அவரை கைது செய்தனா்.
2024-இல் தில்லியில் நடைபெற்ற வழக்கிலும் கிருஷ்ண குமாா் குற்றஞ்சாட்டப்பட்டாா். அங்கு அவா் ஒருவரை வசியம் செய்து 25,000 அமெரிக்க டாலா்களை எடுத்துச் சென்றதாக புகாா் தெரிவிக்கப்பட்டது.
தில்லி மற்றும் மும்பையில் பல்வேறு மோசடி சம்பவங்களில் கிருஷ்ண குமாா் ஈடுபட்டுள்ளாா். தனது நிகழ்வு மேலாண்மை தொழிலில் கரோனா நோய் தொற்றுக்கு பிறகு இழப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து அவா் இந்த மோசடிகளை செய்ததாக கூறப்படுகிறது. அவா் காவலில் ஏடுக்கப்பட்ட விசாறரணை நடைபெற்று வருகிறது என காவல் துறைனா் தெரிவித்தனா்.

