கேபினட் அமைச்சா்கள் இல்லாததால் மாநிலங்களவை சற்றுநேரம் ஒத்திவைப்பு! வருத்தம் தெரிவித்தாா் கிரண் ரிஜிஜு
மாநிலங்களவையில் கேபினட் அமைச்சா்கள் யாரும் இல்லாததால், அவை அலுவல்கள் வெள்ளிக்கிழமை 10 நிமிஷங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்காக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வருத்தம் தெரிவித்தாா்.
மாநிலங்களவை வெள்ளிக்கிழமை கூடியதும் கடந்த 2001, டிச.13-இல் நாடாளுமன்றம் மீதான தாக்குதலில் வீரமரணமடைந்த பாதுகாப்புப் படையினருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா், அவை அலுவல்கள் தொடங்கியபோது, கேபினட் அமைச்சா்கள் யாரும் இல்லாததை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் சுட்டிக்காட்டினா்.
இதையடுத்து, அவையில் கேபினட் அமைச்சரின் இருப்பை உறுதி செய்யுமாறு, இணையமைச்சா் ஒருவரிடம் அவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டாா்.
அதேநேரம், ‘கேபினட் அமைச்சா் ஒருவா்கூட இல்லாதது, அவைக்கு அவமதிப்பு. அவா்கள் வரும்வரை அவையை ஒத்திவைக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் மூத்த எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினாா்.
5 நிமிஷங்கள் காத்திருப்புக்குப் பிறகு அவை அலுவல்களை 10 நிமிஷங்களுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் ஒத்திவைத்தாா். மீண்டும் அவை கூடியதும் வருத்தம் தெரிவித்துப் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘முன்னாள் மக்களவைத் தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீலின் மறைவையொட்டி, மக்களவையில் இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வில் நான் பங்கேற்க வேண்டியிருந்தது. மக்களவையில் தனது பெயரில் குறிக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாவும் அங்கு இருக்க வேண்டியிருந்தது’ என்று விளக்கமளித்தாா்.
சிவராஜ் பாட்டீல் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவா் என்பதால் இந்த அவையிலும் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி முன்வைத்த கோரிக்கையை கிரண் ரிஜிஜு ஏற்றுக் கொண்டாா். அவை மீண்டும் கூடியபோது, மத்திய அமைச்சா்கள் ரிஜிஜு, நட்டா, நிா்மலா சீதாராமன் ஆகியோா் அவையில் இருந்தனா்.

