

உத்தரப் பிரதேசத்தில் உள்ள தில்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அடர்ந்த மூடுபனி காரணமாக நேரிட்ட பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
விரைவுச் சாலையில் சென்றுகொண்டிருந்த 8 பேருந்துகள் மற்றும் மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதியதில் ஒரு பேருந்தில் தீப்பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பேருந்துகளுக்கும் தீ பரவியதால் என்ன செய்வதென்று அறியாத வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்துப் பயணிகள் தீயில் காயமடைந்தனர்.
முதல்கட்டத் தகவலின் அடிப்படையில், யமுனா விரைவுச் சாலையின் ஆக்ரா-நொய்டா சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல் கண்காணிப்பாளர் ஷ்லோக் குமார் தெரிவித்தார்.
அடர்ந்த மூடுபனி காரணமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதனால், ஒரு பெரிய தீ விபத்து நேரிட்டு, பேருந்துகள் மற்றும் கார்கள் சில நிமிடங்களில் எரிந்தன.
தீ விபத்து நேரிட்டதும் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் 4 பேர் தீ விபத்தில் பலியாகியுள்ளனர். 150 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மதுரா மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு சுமார் 25 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பலரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.
மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்தில் வாகனங்களை அகற்றியதால், விரைவுச் சாலையின் பாதிக்கப்பட்ட பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மூடுபனி காரணமாக விபத்து நேரிட்டிருந்தாலும் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ள உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.