தில்லியில் நடைபெற்ற தேவி விருதுகள் விழா
தில்லியில் நடைபெற்ற தேவி விருதுகள் விழாEPS

தில்லியில் விழா! பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

தில்லியில் பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள் வழங்கப்பட்டது பற்றி...
Published on

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் தில்லியில் நடைபெற்ற தேவி விருதுகள் விழாவில், 12 பெண் சாதனையாளர்கள், விருதுகள் வழங்கி திங்கள்கிழமை கௌரவிக்கப்பட்டனர்.

தில்லியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், டிச. 15-ஆம் தேதி திங்கள்கிழமை 36-வது தேவி விருதுகள் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும், கெளரவ விருந்தினராக தில்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் கலந்துகொண்டு, பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்தனர்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மனோஜ் குமார் சொந்தாலியா, தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன், ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சாந்த்வானா பட்டாச்சார்யா, தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.

பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்புரை ஆற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:

“நாட்டின் வரலாற்றையும் சமூகத்தையும் வடிவமைப்பதில் பெண்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். அங்கீகாரம் என்பது ஒருவர் செய்யும் வேலையின் தரத்திலிருந்து வருகிறது. ஒருவரின் வேலையே அவர்களின் அடையாளமாக மாறுகிறது. மரியாதை என்பது கேட்டுப் பெறக்கூடாது, அது தானாகவே கிடைக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய தில்லி முதல்வர் ரேகா குப்தா, “நமது நாட்டில் நீண்ட காலமாகவே பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு வருகிறது. ராணி லட்சுமி பாய் முதல் கல்பனா சாவ்லா வரை பெண்கள் தடைகளை உடைத்து சாதனை படைத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

விருது பெற்றவர்கள்

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ், 2024 ஜப்பான் பாரா சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற நீச்சல் வீராங்கனை சிம்ரன் சர்மா, குழந்தைகள் மருத்துவர் மற்றும் பொது சுகாதார நிபுணர் ராதிகா பத்ரா, பேராசிரியர் மற்றும் மரபியல் நிபுணர் சுதா பட்டாச்சார்யா, நடனக் கலைஞர் மற்றும் கல்வியாளர் அதிதி மங்கல்தாஸ் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.

மேலும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சோனியா மாத்தூர், தொழிலதிபர் அர்ச்சனா ஜஹாகிர்தார், எவரெஸ்ட் மலையேறிச் சாதனை படைத்த அனிதா குண்டு, யுவர்ஸ்டோரியின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரத்தா ஷர்மா, நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி ஜெயின், ஆடை வடிவமைப்பாளர் ரீனா தாகா, பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை நிறுவனர் லட்சுமி வி வெங்கடேசன் ஆகியோருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Summary

Devi Awards being presented to 12 women achievers in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com