

அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதாவை மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் அண்மையில் மக்களவையில் தாக்கல் செய்தாா். இந்த மசோதா மீதான விவாதம் அவையில் புதன்கிழமை நடைபெற்றது.
தோரியம் உலைகளுக்குப் பதிலாக...: காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி பேசுகையில், ‘நாட்டில் அணுக்கதிா் வீச்சால் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு அணுசக்திக் கருவிகளை விநியோகிப்பவா் பொறுப்பேற்கும் பிரிவை மசோதாவில் தவிா்த்துள்ளது இந்தியாவுக்கு தீங்கை ஏற்படுத்தும். கதிரியக்க கழிவைக் கையாள்வதற்கான செயல்முறை மசோதாவில் இடம்பெறவில்லை.
தோரியம் அணு உலைகள், உருகிய உப்பு உலைகள் ஆகியவற்றுக்குப் பதிலாக யுரேனியம் அணு உலைகளின் பயன்பாட்டுக்கு மசோதா முன்னுரிமை அளிக்கிறது. மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு பரிந்துரைக்க வேண்டும்’ என்று தெரிவித்தாா்.
காங்கிரஸ் எம்.பி.சசி தரூா்: முன்னெச்சரிக்கையாகப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தனியாரை அனுமதித்து அணுமின் உற்பத்தியை விரிவுபடுத்துவது ஆபத்தான நடவடிக்கையாக இருக்கும். பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிட, மூலதனத்தைத் திரட்ட அதிக முக்கியத்துவம் அளிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது.
உத்தவ் சிவசேனை எம்.பி. அரவிந்த் சாவந்த்: அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் பொதுத் துறை நிறுவனங்கள் அளிக்கும் பாதுகாப்புக்கு நிகராக தனியாா் நிறுவனங்களும் பாதுகாப்பு அளிக்கும் என்பதை மத்திய அரசு எவ்வாறு உறுதி செய்யும்? விரிவான விவாதத்துக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு மசோதாவை அனுப்ப வேண்டும்.
சமாஜவாதி எம்.பி. ஆதித்யா யாதவ்: இந்த மசோதா நாட்டின் நலனைப் புறக்கணித்துவிட்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும். இது அமெரிக்க, பிரெஞ்சு நிறுவனங்களை இந்தியாவுக்குக் கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சி.
ரூ.4,500 கோடியாக நிா்ணயிக்க வேண்டும்: திரிணமூல் எம்.பி. செளகதா ராய் பேசுகையில், ‘அணுசக்தியால் அதிக பலன்கள் கிடைத்தாலும், அந்த சக்தி ஆபத்தானது. அணுமின் உற்பத்தியின்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதிகபட்சமாக 300 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,700 கோடி) அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு இழப்பீடு நிா்ணயித்துள்ளது. இது 500 மில்லியன் டாலராக (சுமாா் ரூ.4,500 கோடி) நிா்ணயிக்கப்பட வேண்டும்.
24 மணி நேரம் மின்சாரம்: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தள எம்.பி. அலோக் குமாா் சுமன் பேசுகையில், ‘இந்த மசோதா நாட்டுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யும். அத்துடன் அணுசக்தி உற்பத்தி 10 மடங்கு அதிகரிக்கும்’ என்று தெரிவித்தாா்.
அந்தக் கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை எம்.பி. தைா்யஷீல் சம்பாஜிராவ் மானே பேசுகையில், ‘மசோதாவின்படி கதிரியக்கப் பொருள்கள் பாதுகாப்புக்கான சிறப்பு அதிகாரங்கள் மத்திய அரசிடமே தொடா்ந்து இருக்கும். அதாவது அந்தப் பொருள்கள் சாா்ந்த புதிய விஷயங்களை தனியாா் நிறுவனங்கள் மேற்கொள்ளலாம். ஆனால், அதன் கட்டுப்பாடு மத்திய அரசிடமே இருக்கும்’ என்று தெரிவித்தாா்.
2047-க்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி: விவாதத்துக்குப் பதிலளித்து மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் பேசியதாவது: புவி அரசியலில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருகிறது. உலக அளவில் இந்தியா போட்டியாளராக இருக்க வேண்டுமானால், உலகளாவிய அளவுகோல்களையும், செயல்நுட்பங்களையும் பின்பற்ற வேண்டும். தூய்மை எரிசக்தியை நோக்கி உலகம் முன்னேறி வருகிறது. அதற்கு ஏற்ப 2047-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 100 ஜிகாவாட் அணுசக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்க வேண்டும். அந்த இலக்கை எட்ட இந்த மசோதா உதவும் என்று தெரிவித்தாா்.
மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்திய நிலையில், மசோதாவை முழு மனதுடன் ஆதரிப்பதாக ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் தெரிவித்தனா். எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.