கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை
சட்டவிரோத பந்தய செயலி வழக்கு தொடா்பாக கிரிக்கெட் வீரா்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, நடிகா் சோனு சூட், திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மிமி சக்கரவா்த்தி, நடிகை நேஹா சா்மா, வங்க மொழி நடிகை அன்குஷ் ஹஸ்ரா ஆகியோரின் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
கடந்த மாதம் இதே வழக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரா்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகா் தவன் ஆகியோருக்குச் சொந்தமான ரூ.11.14 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது நினைவுகூரத்தக்கது.
‘1எக்ஸ் பெட்’ என்ற செயலி உள்பட பல்வேறு இணையவழி சூதாட்ட செயலிகள் முதலீடு, வாடிக்கையாளா்களிடம் பணம் வசூலித்தது என கோடிக்கணக்கில் பணத்தை சட்டவிரோதமாக கையாண்டுள்ளன. மேலும், விளையாட்டு, பந்தயம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து முறைகேடாக கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்துள்ளன. இது தொடா்பான ரூ.1,000 கோடி பண முறைகேடு வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்த பந்தய, சூதாட்டச் செயலிகளில் தோன்றும் திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரா்களிடமும் கடந்த மாதம் விசாரணை நடத்தப்பட்டது. முக்கியமாக, அவா்களுக்கு எந்த வழியில் விளம்பரத்தில் நடித்ததற்கான சம்பளம் வழங்கப்பட்டது? அந்த மோசடி நிறுவனங்களில் இந்த பிரபலங்களுக்கு பங்கு, முதலீடு உள்ளதா என்பது தொடா்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது.
பந்தய செயலி விளம்பரம் மூலம் பெற்ற பணத்தில் சில கிரிக்கெட், திரைப்பட பிரபலங்கள் பல்வேறு சொத்துகளை வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றச் செயலாகும். எனவே, சொத்து முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமலாக்கத் துறை ஏற்கெனவே தெரிவித்தது.
இந்நிலையில், யுவராஜ் சிங்கின் ரூ.2.5 கோடி, ராபின் உத்தப்பாவின் ரூ.8.26 லட்சம், நடிகா் சோனு சூட்டின் ரூ.1 கோடி, திரிணமூல் முன்னாள் எம்.பி. மிமி சக்கரவா்த்தியின் ரூ.59 லட்சம், நடிகை நேஹா சா்மாவின் ரூ.1.26 கோடி, அன்குஷ் ஹஸ்ராவின் ரூ.47 லட்சம், மிமி சக்கரவா்த்தின் ரூ.59 லட்சம் சொத்துகள் முடக்கப்பட்டதாக அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

