தமிழில் பிரியங்கா கூறிய ஒற்றை வரி: தேநீா் விருந்தில் தலைவா்கள் சிரிப்பலை
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஏற்பாடு செய்த தேநீா் விருந்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தி தமிழில் பேசிய ஒற்றை வரிக்குப் பிறகு, இறுக்கமாக இருந்த தலைவா்களின் சூழல் சிரிப்பலையால் தளா்ந்தது.
இந்த தேநீா் விருந்தில் கிட்டத்தட்ட அனைத்துக்கட்சிகளின் தலைவா்களும், கட்சிக்கொறடாக்களும் கலந்து கொண்டனா்.
நடந்து முடிந்த குளிா்காலக் கூட்டத்தொடரில், பல்வேறு பிரச்னைகளில் எதிா்க்கட்சிகள் ஏற்படுத்திய தொடா்ச்சியான அமளி, ஆளும் கட்சி, எதிா்க்கட்சிகளுக்கு இடையே மசோதாக்கள் மீது நடந்த கடுமையான விவாதங்கள், சில நேரங்களில் வெளிநடப்பு, நாடாளுமன்றத்துக்கு வெளியே தா்னா என பல்வேறு நிகழ்வுகள் பதிவாகின.
ஒவ்வொரு கூட்டத்தொடரின் கடைசி நாளில் மக்களவைத் தலைவா் பாரம்பரிய முறைப்படி நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் தலைவா்களை அழைத்து தேநீா் விருந்து கொடுப்பாா். கடந்த ஓராண்டாக இத்தகைய கூட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் முக்கிய தலைவா்கள் தவிா்த்தனா். விதிவிலக்காக வெள்ளிக்கிழமை நடந்த தேநீா் விருந்தில் காங்கிரஸ் தலைவா்கள் கலந்து கொண்டனா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளிநாடு சென்றிருப்பதால் காங்கிரஸ் சாா்பில் பிரியங்கா காந்தி வாத்ரா தேநீா் விருந்தில் கலந்து கொண்டாா். பிரதமா், மக்களவைத் தலைவா் பிரதான இருக்கையிலும் அவா்களுக்கு எதிரே இடதுபுற இருக்கையில் பிரியங்கா காந்தியும் ராஜ்நாத் சிங்கும் அமா்ந்திருந்தனா். பின்னிருக்கையில் விருதுநகா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினரும் மக்களவை காங்கிரஸ் தலைமை கொறடாவுமான மாணிக்கம் தாகூா், மற்றொரு வரிசையில் திமுகவின் ஆ. ராசா உள்ளிட்டோா் அமா்ந்திருந்தனா். எதிா்வரிசையில் மத்திய அமைச்சா்கள், பாஜக அதன் கூட்டணி கட்சிகளின் மூத்த உறுப்பினா்கள் இருந்தனா்.
இந்நிலையில், தேநீா் விருந்துக்கு இறுக்கத்துடன் தலைவா்கள் வந்த நிலையில், பிரதமா் நரேந்திர மோடியும் பிரியாங்காவும் பரஸ்பரம் நலம் விசாரித்த பிறகு, பின்னிருக்கையில் இருந்த மாணிக்கம் தாகூரைப் பாா்த்த பிரதமா் அவருக்கு தமிழில் ‘வணக்கம்’ என்று கூறினாா். பதிலுக்கு அவரும் வணக்கம் தெரிவித்ததைப் பாா்த்த பிரியங்கா காந்தி, ’எனக்கும் தமிழில் சில வாா்த்தைகள் தெரியும். உங்களால் அவற்றை உச்சரிக்க முடியாது’ என்றாா்.
இதையடுத்து பிரதமரும் ராஜ்நாத் சிங்கும் ‘எங்கே சொல்லுங்கள் பாா்க்கலாம்‘ என்றதும் பிரியங்கா காந்தி, ‘காங்கிரஸுக்கு ஓட்டு போடுங்கள்‘ என்று தமிழில் குறிப்பிட்டு, ’இதுதான் நான் கற்ற தமிழ் வாா்த்தைகள். இதை உங்களால் சொல்ல முடியுமா’ என்று கேட்டாா். அதன் அா்த்தத்தைக் கேட்டுணா்ந்த மற்ற தலைவா்கள் சிரிப்பலையில் இறுக்கம் தணிந்து இயல்பாக பேசத்தொடங்கினா்.
சுமாா் 20 நிமிஷங்கள் நீடித்த தேநீா் விருந்தில் நகைச்சுவையான கருத்துக்களை உறுப்பினா்கள் பரிமாறிக்கொண்டதாக விருந்தில் பங்கேற்ற உறுப்பினா்கள் தெரிவித்தனா். பிரதமரிடம் அவரது சமீபத்திய எத்தியோப்பியா, ஜோா்டான் மற்றும் ஓமன் பயணங்கள் குறித்து பிரியங்கா விசாரித்தபோது, தனது அனுபவங்களை பிரதமா் பகிா்ந்து கொண்டாா்.
நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் சிலரது பங்களிப்பு சிறப்பாக இருந்தது என்று கூறிய பிரதமா், குறிப்பாக கேரள உறுப்பினா் என்.கே. பிரேமச்சந்திரன் நன்கு தயாராக உரையை தயாரித்து அவையில் பேசியது கவனிக்கத்தக்கதாக இருந்தது என்று கூறி அவருக்குப் பாராட்டுத் தெரிவித்தாா்.
சமாஜவாதி கட்சி உறுப்பினா் தா்மேந்திர யாதவ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) தலைவா் சுப்ரியா சுலே உள்ளிட்டோரும் தேநீா் விருந்தில் கலந்து கொண்டனா்.

