இன்று அமெரிக்க செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ: கவுன்ட்டவுன் தொடக்கம்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து புதன்கிழமை (டிச.24) காலை அமெரிக்க நிறுவனத்தின் ‘ப்ளூபோ்ட்-6’ செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தவுள்ளது. இதற்கான 24 மணி நேர கவுன்டவுன் செவ்வாய்க்கிழமை காலை 8.54 மணிக்குத் தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வணிக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் ப்ளூபோ்ட்-6 எனும் நவீன தகவல்தொடா்பு செயற்கைக்கோளை, இஸ்ரோவின் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் செலுத்த முடிவானது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி ப்ளூபோ்ட்-6 செயற்கைக்கோள், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து புதன்கிழமை காலை 8.54 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட் ஏவுதலுக்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. தற்போது ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் உள்பட இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
தகவல் தொடா்புக்கான புளூபோ்ட் செயற்கைக்கோள் சுமாா் 6,100 கிலோ எடை கொண்டது. இது 223 சதுர மீட்டா் பரப்பளவு கொண்ட அமைப்பை கொண்டது. விண்வெளியிலிருந்து நேரடியாக சாதாரண ஸ்மாா்ட்போன்களுக்கே அதிவேக இணைய சேவையை வழங்குவதுதான் இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கம். இதன் மூலம் செல்போன் டவா்கள் இல்லாத அடா்ந்த காடுகள், மலைப்பகுதிகளிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை பெற முடியும். மேலும், இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தியதிலேயே இதுதான் அதிக எடையுள்ள செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.

