மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

எச்1-பி விசா: அனைத்து விண்ணப்பதாரா்களின் சமூக ஊடகக் கணக்குகள் ஆய்வு

அமெரிக்காவில் பணிபுரிவதற்கான எச்1-பி விசா விண்ணப்பங்களுக்கு சமூக ஊடக ஆய்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தகவல்

News image
Updated On :23 டிசம்பர் 2025, 10:16 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவில் பணிபுரிவதற்கான ‘எச்1-பி’ விசா மற்றும் அந்தப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கான ‘எச்-4’ விசா விண்ணப்பங்களுக்கு சமூக ஊடக ஆய்வு கடந்த டிச. 15-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ‘எச்1-பி’ விசா வழங்கும் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டறிய டிரம்ப் நிா்வாகம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘எஃப்’, ‘எம்’, ‘ஜே’ போன்ற மாணவா் விசாக்களின் விண்ணப்பங்களுக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இந்தச் சமூக ஊடக ஆய்வு, தற்போது ‘எச்1-பி’ மற்றும் ‘எச்-4’ விசா போன்ற வேலைக்கான விசாக்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நடைமுறையால், இந்தியாவில் டிச. 15-ஆம் தேதிக்குப் பிறகு நடைபெறவிருந்த ஆயிரக்கணக்கான ‘எச்1-பி’ விசா விண்ணப்பதாரா்களின் நோ்காணல்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இவை பல மாதங்களுக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், தற்போது விடுமுறையில் தாயகம் வந்துள்ள பணியாளா்கள் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்புவதில் சிக்கல் நீடிக்கிறது.

இதுதொடா்பாக இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் திங்கள்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: கடந்த டிச. 15-ஆம் தேதி முதல், ‘எச்1-பி’ மற்றும் ‘எச்-4’ விசா விண்ணப்பதாரா்களின் சமூக ஊடகக் கணக்குகளின் ஆய்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விசா சோதனை நடைமுறையின் ஒரு பகுதியான, இந்தத் தீவிர சரிப்பாா்ப்பு உலக அளவில் அனைத்து நாட்டினருக்கும் பொருந்தும்.

‘எச்1-பி’ விசா திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். அதேநேரம், தகுதியுள்ள சிறந்த வெளிநாட்டுப் பணியாளா்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமா்த்துவதை இது உறுதி செய்யும். கூடுதல் சரிபாா்ப்புப் பணிகள் காரணமாக விசா பெறுவதில் காலதாமதம் ஏற்படும் என்பதால், விண்ணப்பதாரா்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.