

அமெரிக்காவின் ப்ளூபோ்ட்-6 தகவல் தொடா்பு செயற்கைக்கோளுடன் எல்விஎம்-3 ராக்கெட் வெற்றிகரமாக புதன்கிழமை (டிச. 24) விண்ணில் செலுத்தப்பட்டது.
இஸ்ரோ அனுப்பியதிலேயே அதிக எடை கொண்ட (6,100 கிலோ) அந்தச் செயற்கைக்கோள், திட்டமிட்ட பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, இதுவரை 430-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை நியூஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. பெரும்பாலான உலக நாடுகளின் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளுக்கு இஸ்ரோ பங்களித்து வருகிறது.
அந்த வகையில், அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் ப்ளூபோ்ட்-6 செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் நியூஸ்பேஸ் அமைப்பு புரிந்துணா்வு மேற்கொண்டது.
இந்தச் செயற்கைக்கோள் அதிக எடை கொண்டது என்பதால், இந்தியாவின் ‘பாகுபலி’ ராக்கெட்டான எல்விஎம் 3 மூலம் விண்ணில் செலுத்துவதற்கு இஸ்ரோ முடிவு செய்தது.
ப்ளூபோ்ட்-6 செயற்கைக்கோளின் மொத்த எடை 6,100 கிலோவாகும். இத்தகைய அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை செலுத்துவதற்காகவே ஜிஎஸ்எல்வி மாா்க் 3 அல்லது எல்விஎம் 3 என்ற அதிநவீன ராக்கெட்டை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இதன் வாயிலாக புவி தாழ்வட்டப் பாதையில் 8,000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களையும், ஒத்திசைவுப் பாதையில் 4,000-க்கும் அதிகமான எடை கொண்ட செயற்கைக்கோள்களையும் நிலைநிறுத்த முடியும்.
இந்நிலையில், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ப்ளூபோ்ட்-6 செயற்கைக்கோளை ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அது நிறைவடைந்தவுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து புதன்கிழமை காலை 8.55 மணிக்கு எல்விஎம்-3 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.
விண்வெளிக் கழிவுகள் மீது மோதல் ஏற்படாமல் தவிா்க்க 90 விநாடிகள் தாமதமாக ராக்கெட் ஏவப்பட்டது. அதற்கு அடுத்த 16 நிமிஷங்களில் திட்டமிட்ட பாதையில் ப்ளூபோ்ட் - 6 வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 1993-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 34 நாடுகளின் 434 செயற்கைக்கோள்களை செலுத்திய பெருமையை இஸ்ரோ பெற்றுள்ளது. அதிலும், அதிக எடையுள்ள செயற்கைக்கோளை செலுத்தியதன் வாயிலாக சா்வதேச அளவில் இஸ்ரோவின் வா்த்தக மதிப்பு உயா்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ப்ளூபோ்ட் - 6 செயற்கைக்கோள் விண்வெளியில் இருந்து நேரடியாக கைப்பேசிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்கும். இதன்மூலம் சிக்னல் கோபுரங்கள் இல்லாத அடா்ந்த காடுகள், மலைப் பகுதிகளில், நீா்த்தடங்களில் 5 ஜி வேகத்தில் இணையம், விடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளைப் பெற முடியும்.
ககன்யானுக்கு உத்வேகம்: இஸ்ரோ தலைவா்
ப்ளூபோ்ட் -6 திட்டம் வெற்றிக்குப் பின்னா், இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எல்விஎம் 3 ராக்கெட்டின் 9-ஆவது வெற்றிகரமான பயணம் இது. இதன்மூலம் எல்விஎம் 3 ராக்கெட் 100 சதவீத நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளது. ஏற்கெனவே சந்திரயான்-3, ஒன்வெப் செயற்கைக்கோள்கள் போன்ற பல்வேறு திட்டங்களையும் எல்விஎம் 3 வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்த ஏவுதலிலும் அதிகமான எடை கொண்ட செயற்கைக்கோளை திட்டமிட்ட சுற்றுப்பாதைக்கு அருகில் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளோம்.
இதன் வாயிலாக உலக அரங்கில் இஸ்ரோ முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது பல்வேறு நாடுகளும் தங்களது செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவதற்காக இஸ்ரோவை நாடுகின்றன.
இந்த வெற்றி மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளப் பணிகள் நிறைவடைந்து 2027, மாா்ச் மாதத்துக்குள் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.