தில்லியின் காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம்
தில்லியின் காற்றின் தரத்தில் புதன்கிழமை காலை சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. முந்தைய நாள் ‘கடுமை’ பிரிவில் இருந்த காற்றுத் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு வந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தெரிவித்தது.
தேசியத் தலைநகரின் காற்றின் தரக் குறியீடு (ஏக்யூஐ) செவ்வாய்க்கிழமை 415 புள்ளிகளாக இருந்த நிலையில், புதன்கிழமை காலையில் 336 புள்ளிகளாகப் பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் இருந்ததாக சிபிசிபி தரவு காட்டுகிறது.
தில்லியின் 40 காற்று தர கண்காணிப்பு நிலையங்களில், 36 நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவில் பதிவாகின. நேரு நகரில் அதிகபட்சமாக 392 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளதாக சிபிசிபி-இன் சமீா் செயலி காட்டுகிறது.
தில்லியின் சில பகுதிகளில் அதிகாலையில் மூடுபனி மற்றும் புகைமூட்டம் காண்புதிறனைக் குறைத்தது.
வெப்பநிலை: தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2.7 டிகிரி அதிகமாக 10.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி குறைந்து 22.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. மேலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 78 சதவீதமாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், வியாழக்கிழமை (டிச.25) அன்று காலை வேளையில் மிதமான பனிமூட்டம் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

