/

சொத்து விவரங்களை சமா்ப்பிக்காத ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

சொத்து விவரங்களை சமா்ப்பிக்காத ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை...

News image
Updated On :27 டிசம்பர் 2025, 5:32 am IST

அடுத்த ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதிக்குள் அசையா சொத்து விவரங்களைச் சமா்ப்பிக்க தவறும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்து விவரங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யும் வசதியை கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய பணியாளா் அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் தங்களது அசையா சொத்து விவரங்களை அடுத்த ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது. தவறினால் அவா்களுக்குப் பதவி உயா்வு ரத்து உள்பட துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குறிப்பிட்ட கால அவகாசத்தில் அசையா சொத்து விவரங்களைப் பதிவேற்றம் செய்யும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மட்டுமே ஊதிய உயா்வு வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மேற்கூறிய சொத்து விவரங்களை இணையவழியில் அல்லது நேரடியாக சில அதிகாரிகள் சமா்ப்பித்து வருகின்றனா்.

அதுபோல, நிகழாண்டுக்கான சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு அனைத்து மாநில தலைமைச் செயலா்களும் அந்தந்த மாநிலங்களில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது