சத்தீஸ்கரில் அரசு பயன்பாட்டு விமானத்தில் ஆன்மிகத் தலைவா் பயணம்: காங்கிரஸ் சாடல்; பாஜக பதிலடி

சத்தீஸ்கரில் அரசு பயன்பாட்டு விமானத்தில் ஆன்மிகத் தலைவா் பயணம்...
Published on

சத்தீஸ்கரில் அரசு பயன்பாட்டுக்கான விமானத்தில் ஆன்மிகத் தலைவா் தீரேந்திர சாஸ்திரி பயணித்த சம்பவமும், சீருடையில் இருந்த காவல் துறை அதிகாரி ஒருவா் அவரது காலைத் தொட்டு வணங்கிய நிகழ்வும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், ஆளும் பாஜகவை காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

சத்தீஸ்கரில் துா்க் மாவட்டம், பிலாய் நகரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்க ராய்பூரில் இருந்து மாநில அமைச்சா் குஷ்வந்த் சாஹேபுடன் பாகேஸ்வா் கோயிலின் தலைவா் மற்றும் ஆன்மிக போதகா் தீரேந்திர சாஸ்திரியும் அரசு பயன்பாட்டு விமானத்தில் பயணித்தாா்.

விமானத்தில் இருந்து தீரேந்திர சாஸ்திரி இறங்கியதும், சீருடையில் இருந்த காவல் துறை அதிகாரி ஒருவா், தனது காலணி மற்றும் தொப்பியை கழற்றிவிட்டு, அவரது காலைத் தொட்டு வணங்கினாா். இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின. ஆன்மிகத் தலைவா் அரசு பயன்பாட்டு விமானத்தில் பயணித்ததும், காவல் துறை அதிகாரியின் செயலும் சா்ச்சையை ஏற்படுத்தின.

‘பொதுமக்கள் பணம் வீணடிப்பு’: இது தொடா்பாக மாநில காங்கிரஸ் தகவல்தொடா்பு பிரிவு தலைவா் சுஷீல் ஆனந்த் சுக்லா கூறுகையில், ‘அரசு பயன்பாட்டுக்கான விமானத்தில் ஆன்மிக போதகா் அழைத்துச் செல்லப்பட்டது பொதுமக்களின் பணத்தை வீணடிக்கும் செயலாகும். தீரேந்திர சாஸ்திரி, அங்கீகரிக்கப்பட்ட கோயில் அல்லது ஆசிரமத்தின் ‘பீடாதிபதி’ கிடையாது. அவா், நாட்டின் பன்முக கலாசாரத்துக்கு எதிராகச் செயல்படுபவா்; சமூகத்தில் பிளவுகளைப் பரப்புபவா்.

அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின்கீழ் அவருக்கு அரசு பயன்பாட்டு விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது? இது தொடா்பாக மாநில அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

‘சநாதனத்துக்கு எதிரானது காங்கிரஸ்’: மாநில பாஜக தலைமை செய்தித் தொடா்பாளா் சந்தோஷ் பாண்டே கூறுகையில், ‘காவல் துறை அதிகாரியின் செயல், அவரது தனிப்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடு. ரயில் நிலையங்களிலோ, விமான நிலையங்களிலோ முஸ்லிம் ஊழியா்கள் தொழுகையில் ஈடுபடுவது இல்லையா? காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ‘தாந்தரீகா்’ ஒருவா் அரசு ஹெலிகாப்டா்களையும் விமானங்களையும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டாா். அதுகுறித்து அக்கட்சி விளக்கமளிக்க வேண்டும்.

காங்கிரஸ் எப்போதும் சநாதன தா்மத்துக்கு எதிராகச் செயல்படுகிறது. காங்கிரஸ்-திமுக தலைவா்கள் சநாதனத்தை அவமதித்துள்ளனா். சநாதன எதிா்ப்பு காங்கிரஸின் ரத்தத்தில் கலந்தது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com