

மேற்கு வங்கத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர்.
மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தின் கல்யாணியில் உள்ள பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து இதுவரை 4 உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவர் பெண்கள் எனவும் மாவட்ட காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பலியான இந்த 4 பேரின் அடையாளத்தை நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை. அதேசமயம் குண்டுவெடிப்பில் பலியான 4 பேரும் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று உள்ளூர் மக்கள் சந்தேகிக்கின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அந்த பகுதியில், அபாயகரமான தொழிற்சாலை நடத்த அனுமதி எப்படி வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே நேரத்தில், பட்டாசு ஆலைக்கு தேவையான உரிமம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில், கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள எக்ராவில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.