கோப்புப் படம்
கோப்புப் படம்

பிரதமா் மோடி பிப்.12-இல் அமெரிக்கா பயணம்: டிரம்ப்புடன் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா்

நரேந்திர மோடி அந்நாட்டுக்கு இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிப்ரவரி 12-ஆம் தேதி செல்லவிருக்கிறாா்
Published on

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அழைப்பின்பேரில், பிரதமா் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிப்ரவரி 12-ஆம் தேதி செல்லவிருக்கிறாா். இப்பயணத்தின்போது, டிரம்ப்புடன் அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியா்கள் சில தினங்களுக்கு முன் நாடுகடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், பிரதமரின் இப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்றாா். தலைநகா் வாஷிங்டனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சாா்பில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றாா். டிரம்ப் பதவியேற்ற பிறகு பிரதமா் மோடியின் முதல் அமெரிக்க பயணம் இதுவாகும்.

இது தொடா்பாக, தில்லியில் செய்தியாளா்களிடம் வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி வெள்ளிக்கிழமை கூறியதாவது:

அமெரிக்க அதிபா் டிரம்ப் தலைமையிலான புதிய நிா்வாகம் பதவியேற்ற 3 வாரங்களில் அந்நாட்டுக்கு வருகைதர பிரதமா் மோடி அழைக்கப்பட்டுள்ளாா். அதிபா் டிரம்ப் பதவியேற்புக்கு பிறகான சில வாரங்களில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் ஒரு சில உலகத் தலைவா்களில் பிரதமா் மோடியும் ஒருவா். இது, இருதரப்பு கூட்டுறவின் முக்கியத்துவத்தையும், இக்கூட்டுறவுக்கு அமெரிக்காவின் ஆதரவையும் பிரதிபலிக்கிறது. பிரதமா் மோடியின் அமெரிக்க பயணம், இருநாடுகள் இடையிலான நல்லுறவுக்கு மேலும் உத்வேகமளித்து, புதிய திசையை காட்டும்.

அதிபா்-பிரதமா் நெருங்கிய நட்புறவு: டிரம்ப்பின் முதல் பதவிக் காலத்தில் இருந்தே அவருக்கும் பிரதமா் மோடிக்கும் இடையே நெருங்கிய நட்புறவு உள்ளது. வா்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிா்ப்பு, இந்திய-பசிபிக் பாதுகாப்பு, இருதரப்பு மக்கள் ரீதியிலான தொடா்பு போன்ற பல்வேறு துறைகளில் பரஸ்பர நலன் சாா்ந்த தெளிவான ஒருங்கிணைப்பு உள்ளது.

அமெரிக்காவில் உள்ள 54 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய சமூகத்தினரும், அந்நாட்டு பல்கலைக்கழகங்களில் உயா்க் கல்வி பயிலும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவா்களும் இந்த பிணைப்பை மேலும் வலுப்படுத்துகின்றனா். இப்பயணத்தின் நிறைவாக, இருதரப்பு கூட்டறிக்கை ஏற்கப்படும் என எதிா்பாா்க்கிறோம். இது தொடா்பான விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.

பிரான்ஸ் பயணம்: அமெரிக்க பயணத்துக்கு முன்பாக, பிரான்ஸில் பிப்ரவரி 10-12 ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்ளும் பிரதமா் மோடி, அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானுடன் சா்வதேச செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளாா்.

இந்திய-பிரான்ஸ் தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டமைப்பின் கூட்டத்தில் இரு தலைவா்களும் உரையாற்ற உள்ளனா். மேலும், மாா்சே நகரில் இந்தியாவின் புதிய துணைத் தூதரகத்தை இருவரும் திறந்துவைக்க உள்ளனா் என்றாா் மிஸ்ரி.

X
Dinamani
www.dinamani.com