

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சரவை நியமனக் குழு அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த சக்திகாந்த தாஸ், தற்போது பிரதமர் மோடியின் முதன்மைச் செயலர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமரின் 2வது முதன்மைச் செயலராக சக்திகாந்த தாஸ் பதவியேற்கவிருக்கிறார் என்றும் மத்திய அமைச்சரவை நியமனக் குழு தெரிவித்துள்ளது.
யார் இந்த சக்திகாந்த தாஸ்?
2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக மூன்றாண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். பிறகு, 2021ஆம் ஆண்டு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டு, 2024ஆம் ஆண்டுதான் அவர் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஒடிசாவைச் சேர்ந்த சக்திகாந்த தாஸ், தமிழகத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகத் தனது பயணத்தைத் தொடங்கியவர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியராகவும், தமிழக அரசின் பல துறைகளின் செயலராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
மத்திய அரசுப் பணிக்குச் சென்று, நிதித் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்து ரிசர்வ் வங்கி ஆளுநராக பணியாற்றினார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது எழுந்த பல்வேறு சிக்கல்களை நேரடியாக எதிர்கொண்டு, விமர்சனங்களுக்கு பதிலளித்து, சாமர்த்தியமாக செயல்பட்டவர் என்பதால், பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்தார்.
இந்த நிலையில்தான், பிரதமர் மோடியின் இரண்டாவது முதன்மைச் செயலராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.