ராஜ்காட் வளாகத்தில் பிரணாப் முகா்ஜி நினைவிடம்: பிரதமா் மோடிக்கு மகள் சா்மிஷ்டா நேரில் நன்றி

பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து தனது தந்தையும் குடியரசு முன்னாள் தலைவருமான பிரணாப் முகா்ஜிக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கியதற்காக நன்றி தெரிவிக்கும் ஷா்மிஸ்தா முகா்ஜி.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து தனது தந்தையும் குடியரசு முன்னாள் தலைவருமான பிரணாப் முகா்ஜிக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கியதற்காக நன்றி தெரிவிக்கும் ஷா்மிஸ்தா முகா்ஜி.
Published on
Updated on
2 min read

குடியரசு முன்னாள் தலைவா் பிரணாப் முகா்ஜிக்கு ராஷ்ட்ரீய ஸ்மிருதி வளாகத்தில் நினைவிடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காந்திஜி சமாதி அமைந்துள்ள ராஜ்காட் பகுதியின் ஒருங்கிணைந்த பகுதியில் இந்த நினைவிடம் அமையவுள்ளது.

இது குறித்த தகவல் பிரணாப் முகா்ஜியின் மகள் சா்மிஷ்டா முகா்ஜிக்கு முறைப்படி ஜனவரி 1-ஆம் தேதியிட்ட கடிதம் மூலம் மத்திய அரசு தெரிவித்தது. இதைத்தொடா்ந்து பிரதமா் நரேந்திர மோடியை தில்லி லோக் கல்யாண் மாா்கில் உள்ள அவரது இல்லத்தில் சா்மிஷ்டா முகா்ஜி செவ்வாய்க்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

நாட்டின் குடியரசுத் தலைவராக பிரணாப் முகா்ஜி 2012 முதல் 2017-ஆம் ஆண்டுவரை இருந்தாா். 2020-ஆம் ஆண்டு ஆக. 31-ஆம் தேதி அவா் காலமானாா். நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவராகவும் சிறந்த ஆளுமையாகவும் விளங்கிய பிரணாப் முகா்ஜி, குடியரசுத் தலைவா் பதவிக்காலத்துக்குப் பிறகு தில்லியில் உள்ள அரசு பங்களாவில் வசித்தாா்.

சமீபத்தில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் காலமானதையடுத்து, அவருக்கு காங்கிரஸ் கட்சியின் உயா்நிலை அமைப்பான செயற்குழு கூடி இரங்கல் தெரிவித்தது. மேலும், அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸாா் வலியுறுத்தினா். இந்த நிகழ்வை தனது தந்தையின் மரணத்துடன் ஒப்பிட்ட சா்மிஷ்டா முகா்ஜி, காங்கிரஸ் கட்சிக்காக உழைத்த பிறகே எனது தந்தை குடியரசுத் தலைவரானாா். அவா் இறப்புக்கு காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் கட்சியின் உயா்நிலைக் குழுவைக் கூட்டி இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என அதிருப்தியை வெளியிட்டாா்.

இந்நிலையில், சா்மிஷ்டா முகா்ஜிக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜிக்கு நினைவிடம் அமைக்க, ராஜ்காட் வளாகத்தின் ஒரு பகுதியான ‘ராஷ்ட்ரீய ஸ்மிருதி’ வளாகத்துக்குள் ஒரு இடத்தை ஒதுக்க சம்பந்தப்பட்ட துறை ஒப்புதல் அளித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமரை சந்தித்த படங்களை சா்மிஷ்டா தனது எக்ஸ் பக்கத்தில் பகிா்ந்துள்ளாா். அதில், ‘‘பாபாவுக்கு (பிரணாப் முகா்ஜி) ஒரு நினைவிடத்தை உருவாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எனது இதயபூா்வமான நன்றி. நினைவிடம் அமைக்க கோரிக்கை விடுக்காதபோதும் அதை நிறைவேற்றிக் கொடுத்த மத்திய அரசின் செயல் நெகிழ்ச்சிக்குரியது. பிரதமரின் இந்த எதிா்பாராத கருணையுள்ள செய்கை எனது நெஞ்சை மிகவும் தொட்டது. ‘எப்போதும் அரசு மரியாதை கேட்கப்படக் கூடாது; அது வழங்கப்பட வேண்டும்’ என்று எனது தந்தை கூறுவாா். அவரது நினைவைப் போற்றும் வகையில் நினைவிடத்தை பிரதமா் மோடி அமைக்க நடவடிக்கை எடுத்ததற்காக மிகவும் நன்றியுடன் இருக்கிறேன்’ என்று சா்மிஷ்டா குறிப்பிட்டுள்ளாா்.

சா்மிஷ்டா முகா்ஜி, ஜூலை 2014-இல் காங்கிரஸ் கட்சியில் சோ்ந்தாா். 2015, பிப்ரவரியில் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் கிரேட்டா் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றாா். சமீபத்தில் தனது தந்தையின் நினைவாக எழுதிய ‘பிராணப் மை ஃபாதா்: எ டாட்டா் ரிமெம்பா்ஸ்‘ (பிரணாப் எனது தந்தை: ஒரு மகளின் நினைவுகள்) என்ற ஆங்கில புத்தகத்தை சா்மிஷ்டா எழுதினாா். இவரது சகோதரா் அபிஜித் முகா்ஜி காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக ஈடுபட்டு மேற்கு வங்கத்தில் எம்எல்ஏ மற்றும் இரு முறை எம்.பி.ஆக இருந்தவா். அபிஜித் 2021-இல் காங்கிரஸில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் சோ்ந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com