பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ரமேஷ் பிதுரியின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போன்ற சாலை அமைப்பேன் என்று தில்லி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி பேசியிருந்தது சர்ச்சையான நிலையில், பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப். 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆம் ஆத்மி வேட்பாளரும் முதல்வருமான அதிஷியை எதிர்த்து தில்லியின் கல்காஜி தொகுதியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி போட்டியிடுகிறார்.
பிரசாரத்தின்போது பேசிய ரமேஷ் பிதுரி, பிகார் மாநில சாலைகளை ஹேமமாலினியின் கன்னங்களைப் போல் ஆக்குவேன் என்று லாலு உறுதியளித்தார். ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. தில்லியில் பாஜக ஆட்சி அமைத்தால், கல்காஜி தொகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போல் ஆக்குவேன் எனப் பேசியிருந்தார். அவரின் இத்தகையப் பேச்சுக்கு பல்வேறு தரப்புகளில் எதிர்ப்புகள் எழுந்தன.
தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி,
''இது முட்டாள்தனமானப் பேச்சு. அவர் தன்னுடைய கன்னங்களைப் பற்றி பேசாமல், மற்றவர் கன்னங்களைப் பற்றி பேசுகிறார். இது அரசியல் சூழலில் தேவையற்றப் பேச்சு. தேர்தல் நேரத்தில் மக்களின் உண்மையான பிரச்னைகளைப் பற்றி பேச வேண்டும். தில்லி மக்களின் நலன் கருதிப் பேச வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
பாஜக வேட்பாளர் பிதுரி, பிரியங்கா காந்தியை மட்டுமின்றி, தில்லி முதல்வர் அதிஷி குறித்தும் அவரின் குடும்பத்தைக் குறித்தும் அவதூறாகப் பேசியிருந்தார்.
அதிஷி மெர்லானா தற்போது அதிஷி சிங்காக மாறியுள்ளார். அவர் தன்னுடைய தந்தையைக் கூட மாற்றிவிட்டார் எனப் பொதுக்கூட்டத்தில் பிதுரி பேசியிருந்தார்.
இதையும் படிக்க | தில்லி தேர்தல்: ஆம் ஆத்மிக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு!