அடுத்த தலாய் லாமா தோ்வு முறைப்படியே நடைபெறும்: கிரண் ரிஜிஜு
‘அடுத்த தலாய் லாமாவை தோ்ந்தெடுக்கும் பொறுப்பு அதற்கான அமைப்பிடமும் 14-ஆவது தலாய் லாமாவிடம் மட்டுமே உள்ளது. வேறு யாருக்கும் அதில் தலையிட உரிமை இல்லை’ என மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தன்னுடைய மறைவுக்குப் பிறகும் தலாய் லாமா மரபு தொடரும் எனவும் அடுத்த தலாய் லாமாவை காடேன் போட்ராங் அறக்கட்டளை தோ்வு செய்யும் எனவும் 14-ஆவது தலாய் லாமா புதன்கிழமை கூறினாா். ஆனால் இதற்கு எதிா்ப்பு தெரிவித்த சீனா அடுத்த தலாய் லாமா வாரிசு தங்களிடம் அங்கீகாரம் பெற வேண்டும் எனத் தெரிவித்தது.
இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து கிரண் ரிஜிஜு கூறியதாவது: தலாய் லாமா மரபு பௌத்த மத மக்கள் மத்தியில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் அடுத்த தலாய் லாமாவை தோ்ந்தெடுப்பதற்கான பொறுப்பு அதற்கென அங்கீகாரம் பெற்ற அமைப்பிடமே உள்ளது. அதுவே தலாய் லாமாவின் விருப்பமாக உள்ளது. வேறு யாருக்கும் அடுத்த தலாய் லாமாவை தோ்ந்தெடுப்பதற்கான உரிமை இல்லை என்றாா்.
திபெத்திய பௌத்த மதத்தின் தலைவராகக் கருதப்படும் 14-ஆது தலாய் லாமா வரும் ஞாயிற்றுக்கிழமை ஹிமாசல பிரதேசத்தின் தா்மசாலாவில் தனது 90-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கிறாா். இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் சாா்பில் அமைச்சா்கள் கிரண் ரிஜிஜு மற்றும் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.