
மகாராஷ்டிரத்தில் நடந்ததை போன்று, பிகாரிலும் வாக்குத் திருட்டுக்கு முயற்சி செய்வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தார்.
பிகாரில் நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக மகாபந்தன் கூட்டணி சார்பில் பிகார் முழுவதும் இன்று போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பாட்னாவில் உள்ள மாநில வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து பேரணியாகச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மை இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. சில மாதங்களில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் மோசமாக தோற்றது. தோற்றவுடன் நாங்கள் எந்த கருத்தும் சொல்லவில்லை.
தரவுகளை ஆராயத் தொடங்கினோம். ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதை அறிந்தோம். வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்ட தொகுதிகளில் பாஜக வென்றது. தேர்தல் ஆணையத்திடம் புதிய வாக்காளர்களின் பட்டியல் கேட்டால் அமைதியாக இருக்கின்றனர். இதுவரை எங்களுக்கு கொடுக்கப்படவில்லை.
மகாராஷ்டிரத்தில் நடந்ததை போன்று, பிகாரிலும் வாக்குத் திருட்டுக்கு முயற்சி செய்கின்றனர். ஆனால், அவர்களுக்கு தெரியாது பிகார் மக்கள் இதை நடக்க விடமாட்டார்கள் என்று. தேர்தல் ஆணையம் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும். ஆனால், பாஜக அறிவுறுத்தல்படி செயல்படுகிறது” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.