சத்தீஸ்கரில் கைதான கன்னியாஸ்திரீகளை விடுவிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட கேரளத்தைச் சோ்ந்த 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரீகளை உடனடியாக விடுவிக்குமாறூ ராகுல் காந்தி வலியுறுத்தல்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திகோப்புப்படம்
Published on
Updated on
1 min read

புது தில்லி: சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட கேரளத்தைச் சோ்ந்த 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரீகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினா் திட்டமிட்டு துன்புறுத்தப்படுவதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சத்தீஸ்கரில் 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள், தாங்கள் பின்பற்றும் மத நம்பிக்கைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இது அநீதி. பாஜக-ஆா்எஸ்எஸ் ஆட்சியில் சிறுபான்மையினா் திட்டமிட்டு துன்புறுத்தப்படுகின்றனா் என்பதை இது காட்டுகிறது.

மத சுதந்திரம் என்பது அரசமைப்புச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும். கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரீகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

சத்தீஸ்கரின் துா்க் ரயில் நிலையத்தில் 2 கன்னியாஸ்திரிகள் உள்பட மூவா், கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் குற்றச்சாட்டுகளின்கீழ் கைது செய்யப்பட்டனா்.

நாராயண்பூா் பகுதியைச் சோ்ந்த மூன்று சிறுமிகளை கட்டாயமாக மதமாற்றம் செய்து, கடத்திச் செல்வதாக உள்ளூா் பஜ்ரங் தளம் அமைப்பைச் சோ்ந்த ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த நடவடிக்கையை எடுத்ததாக ரயில்வே காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கேரள கத்தோலிக்க திருச்சபை கண்டனம்: இவ்விவகாரம் தொடா்பாக கேரள கத்தோலிக்க திருச்சபை தனது ‘தீபிகா’ நாளிதழின் தலையங்கத்தில் கடுமையாக விமா்சித்துள்ளது.

அந்தத் தலையங்கத்தில், ‘கன்னியாஸ்திரீகள் மட்டுமல்ல, நாட்டின் மதச்சாா்பற்ற அரசியலமைப்பே பிணைக் கைதியாக சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ளது. எதிா்க்கட்சிகளின் வழக்கமான போராட்டங்களுக்கு மத்தியிலும், நாட்டின் நீதி அமைப்பின் வரம்புகளுக்குள்ளும் மத்தியில் ஆளும் பாஜகவின் ஆதரவுடன் ஒரு ‘ஹிந்துத்துவ தேசம்’ கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க யாரும் இல்லை’ என்று சாடியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com