
நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 667 புலிகள் உயிரிழந்துள்ளன; 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட இறப்புகள், காப்பகங்களுக்கு வெளியே நிகழ்ந்துள்ளன.
இதில் மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக இறப்புகள் நேரிட்டுள்ளன என்று அரசுத் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு துறையின்கீழ் செயல்படும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய (என்டிசிஏ) தரவுகளின்படி, நாட்டில் கணக்கிடப்பட்ட மொத்த புலிகளின் எண்ணிக்கை 3,682. இதில் 30 சதவீத புலிகள், பாதுகாக்கப்பட்ட காப்பகங்களுக்கு வெளியே வாழ்கின்றன.
கடந்த 2021-ஆம் ஆண்டுமுதல் இதுவரை உயிரிழந்த புலிகளின் எண்ணிக்கை 667 ஆகும். இதில் 51 சதவீத இறப்புகள் (341 புலிகள்) காப்பகங்களுக்கு வெளியே நிகழ்ந்துள்ளன.
காப்பகங்களுக்கு வெளியே மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 111 புலிகளும், மத்திய பிரதேசத்தில் 90 புலிகளும், கேரளத்தில் 28 புலிகளும் உயிரிழந்துள்ளன. தெலங்கானா, உத்தரகண்ட், கா்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் காப்பகங்களுக்கு வெளியே புலிகளின் இறப்பு பதிவாகியுள்ளது. கடந்த 2012 முதல் 2024 வரை உயிரிழந்த புலிகளின் மொத்த எண்ணிக்கை 1,519 என்று என்டிசிஏ தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 785, கா்நாடகத்தில் 563, உத்தரகண்டில் 560, மகாராஷ்டிரத்தில் 444, தமிழகத்தில் 306, அஸ்ஸாமில் 229, கேரளத்தில் 213, உத்தர பிரதேசத்தில் 205 புலிகள் உள்ளன.
புலிகள் உயிரிழப்பு
ஆண்டு மொத்த எண்ணிக்கை காப்பகங்களுக்கு வெளியே
2021 129 64
2022 122 52
2023 182 100
2024 126 65
2025 (இதுவரை) 108 60
பெட்டிச் செய்தி...2
விரைவில் புதிய திட்டம்
மனிதா்கள்-புலிகள் இடையிலான மோதல் அதிகரிப்பால், பாதுகாக்கப்பட்ட காப்பகங்களுக்கு வெளியே புலிகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீா்வுகாணும் நோக்கில், காப்பகங்களுக்கு வெளியே புலிகள் பாதுகாப்புக்கான திட்டத்தை (டிஓடிஆா்) அரசு விரைவில் தொடங்கவுள்ளது. இத்திட்டம், 17 மாநிலங்களில் 80 வனப் பிரிவுகளை உள்ளடக்கியதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.